108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும், வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாதம், பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ஆம் ஆண்டு உலகம் போற்றும் வகையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அத்திவரதர் வைபவத்திற்குப் பிறகு கொரோனவைரஸ் அச்சுறுத்தலால் கடந்த 2020, 2021 ஆண்டுகளில் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறாமல் இருந்தது.

 



தற்பொழுது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீங்கி உள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது. வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அதிகாலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவம் வரும் 22-ஆம் தேதி வரை பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.





பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை மாலை என இருவேளைகளிலும் வரதராஜப்பெருமாள், தங்க சப்பரம், சிம்மம், ஹம்சம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி,யானை, குதிரை, உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரவுள்ளார். வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருடசேவை உற்சவம் வரும் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், திருத்தேர் உற்சவம் 19-ஆம் தேதி வியாழக்கிழமையும் வெகு விமரிசையாக நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன



 

வைகாசி பிரம்மோற்சவ விழாவையொட்டி திருக்கோயில் காலை உற்சவத்தில் தங்கச்சப்பர வாகனத்தில்  ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி ரங்கசாமி குளம், கீரை மண்டபம், பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

 

வரதராஜ பெருமாள் கோயில் காஞ்சிபுரம்

 

வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலய மூலவருக்கு தேவராஜபெருமாள் என்று பெயர். உற்சவரை பேரருளாளன் என்று அழைக்கிறார்கள். தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர் சூட்டி உள்ளனர். இத்தலத்து பெருமாள் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக 24 படிகளை ஏறிச்சென்று தரிசிக்க வேண்டி உள்ளது. பெருந்தேவி தாயார் தனி சன்னதியில் நின்று அருள்பாலிக்கிறார்.

 

அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில், போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.