ஸ்ரீ முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு எனும் பெருமை பெற்றது மதுரை திருப்பரங்குன்றம். இந்த கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகப் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளால் உள்திருவிழாவாக நடைபெற்ற விசாகத் திருவிழா, இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதியளித்துள்ளது. வைகாசி விசாக திருவிழா கடந்த 3 ஆம் தேதி உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரத்தில்  முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். 




அங்கு மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய விழாவான வைகாசி விசாகத் திருவிழாவினை முன்னிட்டு  அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத்துவங்கினர். சண்முகர் சன்னதியில் காலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் கூடிய சண்முகருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகமும், அதனைத்தொடர்ந்து கட்டளைதாரர் பாலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் விசாக கொறடு மண்டபத்தில் காலை 6 மணிக்கு எழுந்தருளினர்.




அங்கு பக்தர்கள் நேற்றிக்கடனுக்காக கொண்டுவந்த பால்குடங்கள் மூலம் சண்முகர் வள்ளி, தெய்வானைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, சிவகங்கை, விருதுநகர்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்ப காவடி, பறவைக் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி, திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, பெரியரத வீதி எங்கும் பால்காவடி எடுத்து ஆயிரணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர்.




கோயில் 16 கால்மண்டபம், சன்னதி தெரு, பெரியரத வீதி மற்றும் கோயிலுக்குள்பல்வேறு இடங்களில் கேமிராக்கள் பொருத்தி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்களுக்கு கோயிலுக்குள் ஆங்காங்கே மின் விசிறி, ஏர்கூலர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பாலாபிஷேகம் செய்யும் பால் கோயில் சஷ்டி மண்டபம் வழியாக வெளியே பைப் லைன் அமைக்கப்பட்டு அங்கு பக்தர்கள் பால் பிடித்து செல்ல வசதி செய்யப்பட்டிருந்தது. விசாக திருவிழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆனையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.  மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்த்து. சுகாதாரத்துறையினர் முதலுதவி மையங்களை அமைத்து பக்தர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்திருந்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ma Subramanian: ’இதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' - ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் பதில் !