தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடந்த ஆண்டு அமலில் இருந்தது. அந்த சூழலில் ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை என கோயில்களில் ஆடி மாத திருவிழாக்களில் மக்கள் அதிகளவு கூடுவார்கள் என்பதால், கோயில் திருவிழாக்கள் மற்றும் மதவழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. 




மேலும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆடி பெருக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் சமூகஇடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கூறி கடந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிபெருக்கினை கொண்டாட தடைவிதித்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 




இந்நிலையில்,  பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சூழலில் கடந்த பல ஆண்டுகளாக காவிரி தண்ணீர் துலாக் கட்டத்திற்கு ஆடி பெருக்கன்று வராததை அடுத்து பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் முறையாக வழிபாடு செய்ய முடியாமல் தவித்து வந்தனர். கடந்த ஆண்டு தண்ணீர் வந்த நிலையிலும், தடை உத்தரவு காரணமாக வழிபாடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.




தற்போது முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக முன்கூட்டியே ஜூன் 12ம் தேதி முன்னர்  மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் முழுவதும் நிரம்பி செல்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இம்முறை சிறப்பான முறையில் ஆடிப்பெருக்கு வழிபாட்டினை காவிரி துலா கட்டத்தில் மேற்கொள்ளலாம் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.




அதன்படி, இன்று காலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் தினசரி கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடி வருகின்றனர். இதேபோன்று காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஏராளமான ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண