தஞ்சாவூர்: பருத்தியில் பூ மற்றும் காய்கள் உதிர்வதை தடுக்க கவனிக்க வேண்டியவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் பயிரிடப்படும் பணப்பயிர்களில் பருத்தி தனி சிறப்பு வாய்ந்தது. இது நார் பயிர்களின் அரசனாகவும், வெள்ளை தங்கம் எனவும் போற்றப்படுகிறது. பருத்தி பயிரிடப்படும் 80 நாடுகளில் நாடுகளில் பரப்பளவில் இந்தியாவும், உற்பத்தியில் சீனாவும், உற்பத்தி திறனில் பிரேசிலும் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் முக்கிய பணப்பயிரான பருத்தி நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் உள்ள 1500 நூற்பாலைகளில் தமிழகத்தில் மட்டும் 700 ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு தேவையான பஞ்சானது, வெளி மாநிலங்களை நம்பியே இருக்க வேண்டி உள்ளது. இதனை சரிசெய்ய உற்பத்தி திறனை அதிகரிக்க சரியான தொழில் நுட்பங்களை கடை பிடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா கேட்டுக் கொண்டுள்ளார்

பருத்தி விளைச்சல் குறைவிற்கு மொட்டுகள், பூக்கள் மற்றும் காய்கள் உதிர்தலும் ஒரு முக்கிய காரணமாகும். இவைகள் உதிர்வதை தடுத்து நன்றாக பலன் பிடிப்பதை உறுதி செய்தால்தான் பருத்தியில் நல்ல விளைச்சல் பெற முடியும் - பூ மொட்டுகள் உதிர்வது இயற்கையான நிகழ்வுதான். எனினும் அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால் விளைச்சல் மிகவும் பாதிக்கப்படும். எனவே இதன் காரணிகளை ஆராய்ந்து ஒருங்கிணைந்த முறையில் மேலாண்மை செய்து உயர் விளைச்சல் பெருவதே நமது நேர்மையான நோக்கமாகும்.

தண்ணீர் பற்றாக்குறை அல்லது வறட்சி,  அதிக தண்ணீர் அல்லது அதிக மழை, வினையியல் குறைபாடு,  சமச்சீர் உரம் இடாதது,  பூச்சி நோய் தாக்குதல், மகரந்த சேர்க்கையில் குறைபாடு போன்றவை முக்கிய காரணமாகும்.

பருத்தியில் பூ மற்றும் காய்கள் உதிர்தலுக்கு ஊட்டச்சத்து அல்லது ஹார்மோன்கள் அல்லது இரண்டும் கலந்த காரணங்கள் என்ற கருத்துகள் நிலவுகிறது. ஊட்டச்சத்து காரணங்களில் கார்போ ஹைட்ரேட்கள் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் செடியில் பிஞ்சுக் காய்கள் உதிர்ந்து விடுகின்றன. அதாவது பயிரின் தேவைக்கேற்ப ஊட்டச்சத்து சரிவிகிதத்தில் இல்லை எனில் பூ, காய்கள் உதிர்ந்து விடுகின்றன . உண்மையில் ஊட்டச்சத்துகளின் குறைபாட்டினால்தான் ஹார்மோன்கள் சமநிலை இழந்து காய்கள் உதிர்ந்து விடுகின்றன.

பருத்தியின் வளர்ச்சி பூத்தல், காய்பிடித்தல், முதிர்ச்சி அடைதல், வெடித்தல் ஆகிய வினையியல் நிகழ்வுகளை ஆக்ஸின் எத்திலின் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகிய மூன்றின் சமநிலைதான் தீர்மானிக்கிறது. இவற்றில் நிலைகளில் குறைபாடு ஏற்படின் பூக்களும், காய்களும் உதிர்ந்து விடுகின்றன. பொதுவாக பருத்தியில் சுமார் 100 முதல் 150 மொட்டுகள் உருவானாலும் அவற்றில் சுமார் 25 முதல் 40 மொட்டுக்கள் மட்டுமே காய்களாக வளர்ச்சி பெற்று வெடிக்கிறது. மற்ற மொட்டுகள், பூக்கள், பிஞ்சுகள் காய்கள் எனப் பல நிலைகளில் உதிர்ந்து விடுகிறது. பெரும்பாலும் சிறிய மொட்டுகள்தான் அதிகம் உதிர்கின்றன என்றும், வினையியல் காரணங்களால் பெரிய மொட்டுகள் உதிர்வது இல்லை என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது.

மேலாண்மை முறைகள்:

 

முதலில் பூ மற்றும் காய்கள் உதிர்வதற்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தகுந்த முறையில் மேலாண்மை செய்ய வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி தெளித்தல்: பருத்தியில் வினையியல் காரணங்களினால் பூக்கள், காய்கள் உதிர்ந்தால் வளர்ச்சி ஊக்கியை இலைவழி தெளிப்பு செய்வது மிகச்சிறந்தது. நாப்தலின் அசிட்டிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கியை 40 பிபிஎம் (ஒரு லிட்டர் தண்ணீரில். 40 மில்லி கிராம் என்கிற அளவில்) விதைத்த 60 மற்றும் 90ம் நாட்களில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களின் கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து கரைசல் தெளித்தல்:

தேவைக்கேற்ப காய்பிடிக்கும் தருணத்தில் டி.ஏ.பி. இரண்டு சதம் (ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம்) + பொட்டாசியம் குளோரைடு ஒரு சதம் (ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம்) கலந்த கரைசலை தெளிக்க வேண்டும்.
பூக்கும், காய்பிடிக்கும் மற்றும் காய் வளர்ச்சி ஆகிய முக்கிய பருவங்களில் மண்ணில் ஈரப்பதம் குறைந்து விடாமல் தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். அதிக மழைபெய்யும் காலங்கள், தண்ணீரை முழுவதும் வடித்து விட வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட அளவு பேரூட்ட மற்றும் நுண்ணுட்ட உரங்கள் இடவேண்டும். சூரிய ஒளி இலைகளின் மீது நன்கு படும்படியாக தேவையான அளவு பயிர் இடைவெளி விட்டு சாகுபடி செய்ய வேண்டும். பருத்தியில், பூக்கள், காய்கள் உதிர்வதை தடுத்து நல்ல பலன் பிடிக்க வளர்ச்சி ஊக்கி மற்றும் ஊட்டச்சத்து கரைசல் தெளித்து அதிக விளைச்சலும், கூடுதல் வருமானமும் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.