சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில் இந்த ஆண்டு அதிக அளவு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, விவசாயிகள் வேளாண் பயிர்களை தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி பாதுகாத்து பயன்பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.   

Continues below advertisement

காலநிலை மாற்றம்

 எல்நினோ நிகழ்வினால், காலநிலையில் இந்த ஆண்டு அதிக அளவு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை எதிர் கொள்ளும் வகையில் நடப்பு கோடை பருவத்தில் வெப்ப அலையில் இருந்து பயிர்களை பாதுகாத்திட கீழ்க்காணும் முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

Continues below advertisement

 பொதுவான அறிவுரைகள்:-  கோடை உழவு அதிக பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும். விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயிர் உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட வேண்டும்.  நண்பகலில் நீர்ப்பாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும். பயிர்களுக்கு இடையே தகுந்த இடைவெளி மற்றும் கவாத்து முறைகளை மேற்கொண்டு காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் மேற்பரப்பு வெப்பநிலையைக் குறைக்கவும் இயற்கை முறை மூடாக்குகள் (வைக்கோல், கரும்புத் தொகை) ஏற்படுத்த வேண்டும். நீராவிப்போக்குத் தடுப்புத் தெளிப்புகளைப் பரிந்துரைக்கப்பட்டவாறு பயன்படுத்த வேண்டும். விரைவில் அழுகக்கூடிய பயிர்களில் அதிகாலையில் அறுவடை மேற்கொள்ள வேண்டும். இலை வழி பயிர் ஊக்கிகளை நல்ல தரமான நீரைப் பயன்படுத்தி தெளிக்க வேண்டும். 

 நெல் பயிர்களை பாதுகாப்பது தொடர்பான அறிவுரைகள்:-  பல்வேறு பயிர் வளர்ச்சி நிலைகளில் 3% கயோலின் (Kaolin) அல்லது 1% பொட்டாசியம் குளோரைடு (KCl) கரைசலை இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.  பிபிஎஃம் (PPFM – Pink Pigmented Faculatative Methylotrophs – நுண்ணுயிரிகள்) எக்டருக்கு 500 மில்லி வீதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

தானியங்கள் முதிர்வடைவதற்கு 15 நாட்களுக்கு முன்னரும், பூக்கும் பருவத்திலும் 2% மோனாஅம்மோனியம் பாஸ்பேட் (MAP) + 1% பொட்டாசியம் குளோரைடு (KCL) கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும். வளர்ச்சிப் பருவத்தில் (குறுவைப் பருவத்தின் போது) 1% பொட்டாசியம் குளோரைடு (KCL) + சைகோசல் (CCC) 500 ppm அளவில் கரைசலை இலைவழியாகத் தெளிக்க வேண்டும். எனவே, விவசாயிகள் வேளாண் பயிர்களை  தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி பாதுகாத்து பயன்பெற வேண்டும் என மாவட்ட  ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.