இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய முடியாததால் விளாத்திகுளம் பகுதியில் சுமார் 200 மூடை முண்டு வத்தல் தேங்கி கிடக்கிறது. நல்ல விலை கிடைப்பதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், அரியநாயகிபுரம், சிவஞானபுரம், சூரங்குடி, குமராபுரம், ராமசந்திரபுரம் ஆகிய பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு கம்பு, பாசி, உளுந்து, சின்ன வெங்காயம், மக்காச்சோளம், மிளகாய், கொத்தமல்லி ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதில், விளாத்திகுளம், புதூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகாய் வத்தல் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் நீளச்சம்பா மிளகாயைவிட முண்டு மிளகாய் தான் அதிகமா சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு சுமார் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். இலங்கை நாட்டில் முண்டு வத்தலுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனால் இங்கிருந்து இலங்கைக்கு முண்டு வத்தல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.




இந்நிலையில், இந்தாண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக முண்டு வத்தல் விளைச்சல் குறைவாக இருந்தது. ஆனால், தொடக்கத்தில் தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் ரூ.30 ஆயிரம் வரை விலை இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல விலை குறைந்து ஒரு குவிண்டால் சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு தான் வாங்கப்படுகிறது. மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, கலவரம் காரணமாக முண்டு வத்தல் ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், நல்ல விலை கிடைக்கும் வரை விளாத்திகுளம், புதூர் பகுதியில் மகசூல் எடுக்கப்பட்ட சுமார் 200 மூட்டைகளில் கிட்டங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து சிங்கிலிபட்டியை சேர்ந்த விவசாயி செல்வகுமாரிடம் கேட்டபோது, கடந்தாண்டை போலவே இந்தாண்டு அதிகளவு மழை பெய்து, வத்தல் விளைச்சலை பாதித்துவிட்டது. அதேநேரத்தில் கடந்தாண்டை போல் இல்லாமல் இந்தாண்டு தொடக்கத்தில் ஒரு குவிண்டால் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. அதன் பின்னர் ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வத்தல் வருகை காரணமாக உள்ளூர் வத்தலின் விலை ஒரு குவிண்டால் ரூ.20 ஆயிரம் என ஆகிவிட்டது.




எங்களுக்கு எப்போது கைகொடுப்பது ஏற்றுமதி தான். கரிசல் பூமியில் விளைவிக்கப்படும் முண்டு வத்தலுக்கு இலங்கையில் நல்ல மவுசு இருந்தது. தற்போது அந்நாட்டில் சூழ்நிலை சரியில்லாததால் ஏற்றுமதி இல்லை. இங்கும் விலை கிடைக்கவில்லை. இதனால் நல்ல விலை வரும் வரை சூரங்குடி, தூத்துக்குடியில் உள்ள தனியார் கிட்டங்கிகளில் சுமார் 200 மூட்டைகளில் முண்டு வத்தல் வைத்துள்ளோம்.ஒரு மூட்டையில் 19 கிலோ வரை இருக்கும். ஒரு கிலோ ரூ.4 ஆயிரம் என்றால், சுமார் ரூ.80 கோடி வரை முண்டு வத்தல் விற்பனையாகாமல் எங்களிடமே தேங்கி உள்ளது.


ஏற்கெனவே, விவசாயத்துக்கு செலவு செய்த நிலையில், தற்போது முண்டு வத்தலை பாதுகாக்கவும் செலவு செய்து வருகிறது. இதனால் எங்களது செலவு இருமடங்காக உயர்ந்துள்ளது. மானாவாரி விவசாயிகளின் நலன் கருதியும் முண்டு வத்தல் பாதுகாத்து நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் அரசு சார்பில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கிட்டங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.