திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு அரசு விதித்த தொகையை விட கூடுதல் வாடகை வாங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு


காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளில் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்தி 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பணிகள் தொடங்கிய நாளிலிருந்து காலம் தவறி பெய்த மழை காரணமாக விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருந்தது. குறிப்பாக இந்த ஆண்டு இரண்டு முறை பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு மீண்டும் புதியதாக நடவு மற்றும் நேரடி விதைப்புகள் மூலமாக விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு இந்த ஆண்டு இரட்டிப்பு செலவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.




இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இரண்டு செயின் டைப் இயந்திரங்களும் 5 டயர் டைப் அறுவடை இயந்திரங்களும் விவசாயிகளுக்கு குறைந்த வாடகை மூலம் விடப்படுகின்றன. அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துறையில் 1630 ரூபாயும் டயர் டைப் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 1010 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.


மேலும் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு செயின் டைப் இயந்திரத்திற்கு 2,500 ரூபாயும் டயர் டைப் அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 1800 ரூபாய் வாடகை நிர்ணயம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.




அதே நேரத்தில் ஈரோடு கரூர் திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் அதேபோன்று ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு வந்து அறுவடை பணிகளில் ஈடுபட்டு உள்ளது. அதேநேரத்தில் அரசு நிர்ணயித்த வாடகையை விட விவசாயிகளிடம் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு 3,500 ரூபாய் வரை வசூல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


ஏற்கனவே விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ள நிலையில் தற்போது அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் வாடகை வசூல் செய்யும் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக கூடுதல் அறுவடை இயந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமெனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்