Just In





இலக்கை தாண்டியது... ரூ.1,202 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது: என்ன தெரியுங்களா?
கொள்முதல் நிலையங்களில் தினமும் 1,200 டன் வரை சராசரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் உரிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு இலக்கை தாண்டி நெல் கொள்முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,202 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி கடந்த ஆண்டு அணை குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்காமல் தாமதமாக ஜூலை மாதம் 28-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் நிறவைடைந்துள்ளது. இதையடுத்து அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் பணிகளை முடுக்கி விட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 597 நெல் கொள்முதல் நிலையஙக்ள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன.
நடப்பு ஆண்டு சம்பா, தாளடி பருவ கொள்முதல் டிசம்பர் மாதம் தொடஙக்கி அடுத்த மாதம் (மே) மாதம் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. தற்போது கொள்முதல் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 4 லட்சத்து 93 ஆயிரம் டன் நெல் கொள்முதுல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 14 ஆயிரம் விவசாயிகளு்ககு ரூ.1,202 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மேலாளர் செல்வம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடியில் நெல் விளைச்சல் அதிகளவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு 597 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்திற்கு சம்பா, தாளடி பருவத்தில் மட்டும் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 4 லட்சத்து 93 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இன்னும் இலக்கை எட்டுவதற்கு 7 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. இதுவும் சில நாட்களில் கொள்முதல் செய்யப்படும். தஞ்சை மாவட்டத்தில் அறுவடை பணிகள் முடிவடைந்து கொள்முதல் செய்யப்பட்ட இடங்களில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது 139 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்த கொள்முதல் நிலையங்களில் தினமும் 1,200 டன் வரை சராசரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் உரிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் 5.5 லட்சம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 10 தாலுகாக்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகி்னறன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகள் சம்பா, தாளடி இலக்கு 5 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டு இலக்கை நெல் கொள்முதல் எட்டியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நெல் கொள்முதல் குறைந்தது. கடந்த ஆண்டு 3 லட்சத்து 63 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு தற்போதே இலக்கை எட்டும் தருவாயில் உள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது வரை 1 லட்சத்து 30 ஆயிரம் டன் வரை நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.