தமிழகத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.



தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் கட்டப்பட்டு வரும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் கட்டுமான பணியை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 1.97 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு குறுவை பருவத்தில் 2.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரபி பருவத்தில் 8.54 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 58 லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்பட தமிழகம் முழுவதும் 3,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.





தமிழ்நாட்டில் உள்ள திறந்தவெளி கிடங்குகள் முழு பாதுகாப்புடன் கூடிய கிடங்குகளாகவும், மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளாகவும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.238 கோடி செலவில் கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இக்கிடங்குகள் சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் கட்டப்படுகின்றன.

இதில், தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் 50,000 டன் கொள்ளளவு, திட்டக்குடியில் 7,500 டன்கள் கொள்ளளவு, செல்லம்பட்டியில் 6,000 டன் கொள்ளளவு என மொத்தம் 62,500 டன்கள் கொள்ளளவு உள்ள கிடங்குகள் கட்டப்படுகிறது. இக்கிடங்குகள் கட்டுமான பணி ஜனவரி மாதத்துக்குள் முடிவடைந்து விடும்.

தமிழகத்துக்கு சர்க்கரை, அரிசி உள்ளிட்டவற்றுக்கான மானியமாக ரூ. 5,120 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய மானிய தொகை ரூ. 6,813 கோடி நிலுவையில் உள்ளது.




நியாய விலை கடைகளில் கண் கருவிழி திரை மூலம் பொருள்கள் வழங்குவது  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, உணவுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தமிழ் நங்கை மற்றும் பலர் உடன் இருந்தனர்.