பால் வளத்துறை சார்பில் மொத்தம் 13,126 பயனாளிகளுக்கு ரூ.8.98 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
நலத்திட்ட உதவி
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் சிவகங்கை மாவட்டத்தில், பால் வளத்துறையின் சார்பில் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பிஎன்ஆர் மஹாலில் வழங்கினர். பால்வளத்துறை அமைச்சர்மனோ தங்கராஜ் தெரிவிக்கையில்..,” விவசாய பெருங்குடி மக்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டமானது பால் உற்பத்தியினை வரும் காலங்களில் கூடுதலாக பெருக்கிட வேண்டும். தற்பொழுது ஆவின் பால் பொதுமக்களிடையே தேவைக்கேற்ப வழங்குவதுடன், ஆவின் மூலம் தயாரித்து வழங்கப்படும் உணவுப்பொருட்களும் மக்களிடையே அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது 48 சதவீதம் விற்பனையில் அதிகரித்து 100 சதவீதத்தினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்குடன், கிராமப்பகுதிகளில் அதிக அளவு கறவை மாடுகள் வளர்த்து பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் அதிகளவில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, தாட்கோ சார்பில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது கடந்த 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியம் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டு உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது.
பால் விற்பனை
இவ்வொன்றியத்தில் நாளொன்றுக்கு காரைக்குடியில் 50,000 லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால்பண்னை ஒன்றும், சிவகங்கையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் திறன் கொண்ட பால் குளிருட்டும் மையம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நாளொன்றுக்கு 61,000 லிட்டர் திறன் கொண்ட 13 தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும், இவ்வொன்றியத்தில் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படும் 524 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் 9838 உறுப்பினர்கள் பால் வழங்கி வருகின்றனர். சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பால் உற்பத்தி உறுப்பினர்கள் வழங்கும் பாலானது 32 பால் சேகர வழித்தடங்களின் மூலம் பால் சேகரம் செய்யப்பட்டு, 19 பால் விநியோக வழித்தடங்களின் மூலம் பால் விற்பனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊக்கத்தொகை
ஒன்றியத்தின் பால் உற்பத்தி நாளொன்றுக்கு சராசரியாக 65,000 லிட்டராகவும், பால் உற்பத்தி சராசரியாக 89,000 லிட்டராகவுள்ளது. தற்பொழுது நாளொன்றுக்கு சராசரியாக 65,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதால் மீதம் தேவைப்படும் பால் பிற ஒன்றியங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டும் வெண்ணெய் மற்றும் பால் பவுடரினை மறுசுழற்சி செய்வதன் மூலமும் தயார் செய்யப்படுகிறது. தற்போது மாதம் ஒன்றிற்கு சராசரியாக ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இச்சங்கங்கள் மூலம் 2024-2025 –ல் மொத்தம் 2 கோடியே 32 இலட்சம் லிட்டர் அளவிற்கு பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வொன்றியம் ஈட்டிய இலாபத்தில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.70 வீதம் மொத்தம் 6.27 கோடி மதிப்பீட்டில் 9838 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை இவ்விழாவின் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இது தவிர 117 உறுப்பினர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கறவை மாட்டுக் கடனுதவி மற்றும் பராமரிப்பு கடனுதவியும், 3107 உறுப்பினர்களுக்கு ரூ.76.00 இலட்சம் மதிப்பீட்டில் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையும் , 2 புதிய சங்கங்களுக்கான பதிவுச் சான்றுகளும், 56 ஆவின் பணியார்களுக்கு ரூ. 90இலட்ம் மதிப்பீட்டில் ஈட்டிய விடுப்பு பணப்பலன்களும் இரண்டு மொத்த பால் விற்பனை முகவர்களுக்கான ஆணையும், இரண்டு புதிய சங்கங்களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டில் பால் பரிசோதனை கருவிகளும் மற்றும் 2 ஒன்றிய இளநிலை செயற் பணியாளர்களுக்கு ஆணையும் என மொத்தம் 13,126 பயனாளிகளுக்கு ரூ.8.98 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் இவ்விழாவின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ12.70 வரை ஊக்கத்தொகை
மேலும், இவ்வொன்றியத்தின் மூலம் புதிதாக ரூ.5 மதிப்பீட்டில் Toned Milk மற்றும் ரூ.10 மதிப்பீட்டில் Premium Gold என இரண்டு வகைகளில் பதப்படுத்தப்பட்ட பால் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தியின் அடிப்படையில் சுமார் 1 லிட்டருக்கு ரூ12.70 வரை ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பெருங்குடி மக்கள் நிறைந்த மாவட்ட திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டத்தில் பால் உற்பத்தியினை அதிகப்படுத்தி பிற மாவட்டங்களுக்கும் வழங்கிடும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை கூட்டுற பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களை சார்ந்தோர் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாமனியர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கென தமிழக அரசால் இதுபோன்று பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனதெரிவித்தார்.