பயிர்களை தாக்கும் பூச்சிகள் சில சமயங்களில் தங்கள் தாயகத்திலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவி தாக்குதலை உண்டாக்குவதுண்டு. அவை காற்றின் மூலமாகவோ, விதை தானியம், கன்றுகள் வாயிலாகவோ மற்ற இடங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்திய அளவில் மிக முக்கிய மற்றும் அதிகமாக மகசூலை பாதிக்கும் பூச்சியாக உருவெடுத்துள்ளது பால் ஆர்மிவார்ம் என்ற புது வகை படைப்புழுவாகும்.



அமெரிக்காவை தாயமாகக் கொண்ட இந்த பால் ஆர்மிவார்ம் என்ற படைப்புழுவானது முதன்முதலாக அதன் தாயகத்தை தாண்டி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 2016 ஆம் ஆண்டு மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டது. தற்போது வரை 44 ஆப்பிரிக்க நாடுகளில் பரவி மக்காச்சோளத்தில் மிகுந்த மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்காச்சோளத்தில் இதன் தாக்குதல் கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் கண்டறியப்பட்டு தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்காச்சோளம் மட்டுமின்றி சோளம், நெல், கரும்பு, பருத்தி, சோயா கடலை. கோதுமை, வெங்காயம், முட்டைக்கோசு, உருளைக்கிழங்கு தக்காளி, சிறுதானிய பயிர்கள் உட்பட 80 வகையான பயிர்களை தாக்கி சேதத்தை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது.

பெண் அந்து பூச்சியானது இரவு நேரங்களில் 100 முதல் 200 முட்டைகளை குவியலாக இலைகளின் அடிப்புறத்தில் இட்டு அதனை ரோமங்களால் மூடி பாதுகாப்பாக வைத்திருக்கும். அந்த பெண் அந்து பூச்சி தன் வாழ்நாளில் சராசரியாக 1500 முட்டைகளை இடும் ஆற்றல் கொண்டது. முட்டை பருவமானது இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும்.

புழு பருவமானது ஆறு நிலைகளைக் கொண்டது. இளம் புழுவானது பச்சை நிறத்தில் கருப்பு நிற தலையுடன் காணப்படும். நன்கு வளர்ந்த புழுவின் தலையானது பழுப்பு கலந்த சிவப்பு நிறத்துடன் காணப்படும். இதன் முகப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஆங்கில எழுத்து ஒய் –ஐ திருப்பி போட்டது போன்று அடையாளம் காணப்படும். புழுவின் வால் பகுதியில் நான்கு புள்ளிகளுடன் சதுரம் போன்ற அமைப்புடன் தோற்றமளிக்கும் முதிர்ந்த புழுவானது 3 முதல் 4 சென்டிமீட்டர் நீளம் இருக்கும்.
 
படைப்புழுவானது பின்பு இரண்டு முதல் 8 சென்டிமீட்டர் ஆழத்திற்கு மண்ணிற்குள் சென்று கூட்டு புழுவாக மாறிவிடும். கோடைகாலங்களில் கூட்டுப் புழு பருவமானது 8 முதல் 9 நாட்களும் குளிர்காலங்களில் 20 முதல் 30 நாட்களும் ஆகும்.

அந்து பூச்சிகள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவை. வளர்ந்த அந்து பூச்சியின் வாழ்நாள் சராசரியாக 10 நாட்கள் ஆகும். தட்பவெப்ப நிலை சராசரியாக 28 செல்சியஸ் இருக்கும் பொழுது இந்த படைப்புழுவின் மொத்த வாழ்நாளானது 30 முதல் 40 நாட்கள் ஆகும். குளிர்காலங்களில் 60 முதல் 90 நாட்கள் வரை இதன் வாழ்நாள் நீடிக்கும்.


இளம் புழுக்கள் அதிகமாக இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி தின்று சேதத்தை விளைவிக்கும். இதனால் இலைகளில் பச்சையமில்லாமல் வெண்மையாக காணப்படும். 3 முதல் 6ம் நிலை புழுக்கள் இலையுறையினுள் சென்று கடித்து உண்டு பாதிப்பை உண்டாக்கும். அதனால் இலைகள் விரியும் பொழுது வரிசையாக சிறு துளைகள் போன்று காணப்படும். 20 முதல் 40 நாட்கள் உடைய இளம் பயிரையே இவை அதிகமாக தாக்கும்.

மேலாண்மை முறைகள்

நன்கு உழவு செய்வதன் வாயிலாக கூட்டுப் புழுக்களை மண்ணில் இருந்து வெளிக்கொணர்ந்து அழிக்கலாம். வயலில் அடியுரமாக 250 கிலோ வேப்பம்புண்ணாக்கு இடுவதனால் கூட்டுப்புழுவில் இருந்து அந்து பூச்சிகள் வெளிவருவது கட்டுப்படுத்தப்படும். விளக்கு பொறிகளை பயன்படுத்தி அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். வயலை சுற்றியுள்ள வரப்புகள் மற்றும் இதர பகுதிகளில் பயறு வகை பயிர்கள், பூக்கும் தாவரங்களை வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரித்து படைப்புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
 
வயலில் ஒரே இடத்தில் தொடர்ந்தார் போல் பத்து முதல் 20 செடிகளையும் மொத்தமாக 5 இடங்களில் பயிர்களை ஆய்வு செய்து தாக்குதல் சதவீதத்தை அறிய வேண்டும். 40% சேதம் காணப்பட்டால் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.


அசடிராக்டின் ஒரு சத மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து இலை மடக்குகளில் தெளிக்க வேண்டும். உயிரியல் முறை பூச்சிக்கொல்லி மருந்துகளான பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ், பிவேரியா பாசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலியே போன்றவற்றை பயன்படுத்தியும் இவற்றின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

ப்ளூபென்டியாமைட் 40 எஸ்.சி அல்லது குளோரன்டிரான்லிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது ஸ்பினோசைட் 45 எஸ்.சி. ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 10  லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்று அளவிலும் அல்லது இமாமேக்டின் பென்சோயேட்  5 எஸ்.ஜி மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு நாலு கிராம் என்று அளவிலும் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து குருத்துக்களில் தெளிக்க வேண்டும்.