மயிலாடுதுறை: கடந்த ஆண்டு பருவம் தவறிப் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை 11 மாதங்களாகியும் வழங்காததைக் கண்டித்தும், அண்மையில் டெல்டாவைப் பாதித்த டிட்வா புயல் நிவாரணத்திற்காக பயிர்ச் சேதங்களை ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் கணக்கெடுக்கும் முறையைக் கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசின் விவசாய விரோத மசோதாக்களை எதிர்த்தும் இன்று மயிலாடுதுறையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

11 மாதங்களாகியும் வராத நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பருவம் தவறி எதிர்பாராத கனமழை பெய்தது. இதன் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெருமளவு சேதமடைந்தன. இந்தப் பயிர்ச் சேதங்களுக்காக ரூ.63 கோடி நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அறிவிப்பு வெளியாகி 11 மாதங்களைக் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. உடனடியாக நிலுவையில் உள்ள நிவாரணத்தை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் முக்கியக் கோரிக்கையாக முன்வைத்தனர்.

ஜி.பி.ஆர்.எஸ். கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு

சமீபத்தில் வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் மீண்டும் சேதமடைந்தன. இதற்கான நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுக்கும் பணிக்கு ஜி.பி.ஆர்.எஸ். (GPRS) கருவி மூலம் கணக்கெடுக்கும் முறையை அரசு அறிவித்தது. இந்த முறையானது காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன், துல்லியமற்ற கணக்கெடுப்புக்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டிய விவசாயிகள், இந்த முறையைக் கைவிட்டு, துரித கணக்கெடுப்பு முறையை அமல்படுத்தக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Continues below advertisement

விவசாய விரோத மசோதாக்களும், ஸ்மார்ட் மீட்டர் திட்டமும்

மத்திய அரசு புதிதாகத் தாக்கல் செய்ய உள்ள விதை மசோதாக்கள் உள்ளிட்ட சட்டத்திருத்தங்கள் விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளன என்றும், இந்த மசோதாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்றும் கூறி, அவற்றை உடனடியாகக் கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

மேலும், மின்சார விநியோகத்தை தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பொதுமக்கள் முன் கூட்டியே பணம் செலுத்திப் பயன்படுத்தும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

சட்ட நகல்களை எரித்து ஆவேசமான எதிர்ப்பு

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார்.

இப்போராட்டத்தில் அனைத்திந்திய விவசாயிகள் சங்கம், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம், தஞ்சை காவேரி ஒருங்கிணைப்புக் குழு, வீரசோழன் விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் திரளான விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மத்திய அரசின் விவசாய விரோத சட்ட நகல்கள் அடங்கிய நகல்களை விவசாயிகள் திடீரென தீயிட்டு எரித்து தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நாளை (டிசம்பர் 10) திட்டமிடப்பட்டிருந்த விவசாய சட்ட நகல் எரிப்புப் போராட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தின் மூலம், நிலுவையில் உள்ள நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும், ஜி.பி.ஆர்.எஸ். கணக்கெடுப்பைக் கைவிட வேண்டும், விவசாய விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக மற்றும் மத்திய அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல விவசாயிகள் தீவிரமாக முயற்சித்தனர்.