திருவண்ணாமலை மாவட்டத்தில், சம்பா, நவரை மற்றும் சொர்ணவாரி பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் கொள்முதல் செய்வதற்காக, நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது.


நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்:


அதன்படி, சொர்ணவாரி பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் கொள்முதல் செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் 11 தாலுகாக்களில் முதற்கட்டமாக 38 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 4ம் தேதி முதல் திறக்க மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனுமதித்துள்ளார்.


திருவண்ணாமலை வட்டத்தில் வெளுக்கானந்தல். கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் சோமாசிபாடி, அணுக்குமலை. செங்கம் வட்டத்தில் கண்ணக்குருக்கை, மேல்முடியனூர், தண்டராம்பட்டு வட்டத்தில் தண்டராம்பட்டு ஆரணி வட்டத்தில் அரியாபாடி, தச்சூர், போளூர் வட்டத்தில் மண்டகொளத்தூர். எடப்பிறை, குன்னத்தூர், கலசப்பாக்கம் வட்டத்தில் எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி, வந்தவாசி வட்டத்தில் வல்லம், நல்லூர், தென்னாத்தூர், பொன்னூர், கொவளை, மருதாடு, எரமலூர். செய்யாறு வட்டத்தில் பாராசூர், புளியரம்பாக்கம், மேல்சீசமங்கலம், கடுகனூர், தவசிமேடு, வாச்சனூர், ஆக்கூர், வெம்பாக்கம்வட்டத்தில் அரியூர், நாட்டேரி, பெருங்கட்டூர், வெம்பாக்கம், தூசி, சிறுநாவல்பட்டு, பைரவபுரம், சேத்துப்பட்டு வட்டத்தில் நம்பேடு, நெடுங்குணம், மேல்சாத்தமங்கலம் ஆகிய இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.



விவசாயிகள் பயன்பெறுவது எப்படி?


விவசாயிகள் பின்வரும் நடைமுறைகளைபின்பற்றி மேற்படி நேரடிநெல் நிலையங்களில் நெல் விற்பனை செய்து பயன் பெறலாம். மேலும் நாளை (28.08.2023) முதல் முன்பதிவு துவங்கும், விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கலில் பெற வேண்டும்.


நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயின் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு" வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது" என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.


 




 


பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரின் DASH BOARD -க்கு அனுப்பப்பட்டு அவரால், பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையின் ஒப்புதல் / நிராகரிப்பு செய்யப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும்.


உதவி எண்கள்:


விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிகம் மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது Whatsapp வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும். எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்