தஞ்சாவூர்: பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் முட்செடிகள் காடுபோல் மண்டி கிடக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் நடு வாய்க்கால் மற்றும் படுகை வாய்க்கால், வடிகால் வாரி வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், கோவில்பத்து, சித்தாயல் பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வெண்ணாறு மற்றும் ஆனந்த காவிரியில் வரும் தண்ணீரை நம்பியே சாகுபடி பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனந்த காவிரி, வெண்ணாற்றில் இருந்து வயல்களுக்கு நடு வாய்க்கால், படுகை வாய்க்கால் மற்றும் வடிகால் வாரி வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வருகிறது.

Continues below advertisement

இந்த வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக எவ்வித பராமரிப்புமின்றி தூர்வாரப்படாமல் முட்புதர்கள் மண்டி, புதர் மண்டிய காடு போல் காட்சி அளிக்கின்றன. இதனால் விவசாய சாகுபடி காலங்களிலும், மழைக்காலங்களிலும் தண்ணீர் தடையின்றி செல்ல முடியாமல் விவசாயிகள் தொடர்ந்து பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் மற்றும் வாரிகளில் பல ஆண்டுகளாக தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாததால், கருவேல மரங்கள் மற்றும் அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து தண்ணீர் செல்லும் வழியை முழுமையாக அடைத்துள்ளன. இதனால் வாய்க்காலின் இயல்பு பாதையே தெரியாத அளவுக்குப் பாழடைந்து காணப்படுகிறது. மேலும், வாய்க்கால் படுகைகளில் மண் அடைத்து, மண் மேடாகிப் போனதால் நீரோட்டம் முற்றிலும் தடைபடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போதும் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் அதிகளவில் வந்து சாகுபடி வயல்களை மூழ்கடிக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையில் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலைதான் இன்றும் நீடித்து வருகிறது.

வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், பெருக்கெடுத்து வரும் மழைநீர் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை மூழ்கடிக்கிறது. இதன் காரணமாகப் பயிர்கள் அழுகி, விவசாயிகளுக்குப் பெருமளவில் மகசூல் இழப்பும், ஈடு செய்ய முடியாத நிதி நெருக்கடியும் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

அதேபோல், இந்த வாய்க்கால்களில் முறையான கட்டமைப்பு மற்றும் தண்ணீரை நெறிப்படுத்தக்கூடிய 'ஷட்டர்'  வசதிகள் இல்லாததாலும், இருக்கின்ற மதகுகள் சேதமடைந்து காணப்படுவதாலும் தண்ணீரைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால் பாசனப் பருவத்தில் தண்ணீரைச் சேமித்து பயன்படுத்த முடியாமலும், மழைக்காலத்தில் வடிய வைக்க முடியாமலும் விவசாயிகள் இருமுனைப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

எனவே, தூர்வாருவதோடு மட்டுமன்றி, புதிய ஷட்டர்களை அமைத்துத் தண்ணீரை முறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படாத சூழலில், ஆற்றில் தண்ணீர் வரத்து இன்றி வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகின்றன. தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்கு இதுவே மிகவும் ஏற்ற மற்றும் பொன்னான காலகட்டமாகும்.

ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட பிறகு பணிகளைத் தொடங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது என்பதால், இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பூதலூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், "பல முறை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேட்டூர் நீர் திறப்பதற்கு முன்பாகவே நடு வாய்க்கால், படுகை வாய்க்கால் மற்றும் வாரி வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் முட்செடிகள், புதர்களை அகற்றி,  மேடிட்டு கிடக்கும் மண்ணை வெட்டி எடுத்து தூர்வார வேண்டும்.

மேலும் தேவையான இடங்களில் புதிய ஷட்டர்களை அமைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" என வேதனையுடன் வலியுறுத்தினர்.