தஞ்சாவூர்: கோடை சாகுபடியை முன்னிட்டு தஞ்சை அருகே புலவர்நத்தம் பகுதியில் விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். இயற்கையை நம்பி சாகுபடி செய்யும் எங்களை மழை கைவிடாது என்றும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.


முப்போகம் நெல் சாகுபடி


தமிழகத்தின் நெற்களஞ்சியமாக  தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர்.




விவசாயிகள் சாய்ஸ் நெல்தான்


குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.


பம்ப்செட் மூலம் கோடை நெல் சாகுபடி


தஞ்சாவூர் மாவட்டத்தில் பம்ப்செட் மூலம் கோடை நெல் சாகுபடி தொடங்கியுள்ளது. எனவே விதை நெல் தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்கி வருகிறது.


இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.


கோடை நெல் சாகுபடி ஆயத்த பணிகள்


இந்த நிலையில் கடந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24ம் தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, மற்றும் சம்பா, தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவை விட அதிக அளவில் நடைபெற்றது.அதே போல நெல் கொள்முதலும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெறும். அதன்படி தற்போது பம்புசெட் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 


தஞ்சையை அடுத்த புலவர்நத்தம் பகுதியில் விவசாயிகள் வயல்களில் விதைநெல் தெளித்து வருகின்றனர்.  ஒரு சில வயல்களில் எந்திரம் மூலம் நாற்று நடவு செய்யப்பட்டு வருகின்றன. 


தட்டுப்பாடின்றி உரம் கிடைக்கணும்


இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்துக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நம்புகிறோம். இதனால் தற்போது முன்பட்ட குறுவைக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பம்புசெட் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும் போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை வரும். கோடை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் மற்றும் உரம் போன்ற இடுபொருட்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வாங்கி இருப்பு வைத்து வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.