தஞ்சாவூர்: பயிருக்கு தீமை செய்யும் பூச்சிகளை மட்டுமே தின்னும் சிலந்தி வகைகள் ஒரு இரை விழுங்கி ஆகும். நெற்பயிரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சிலந்தி உண்ணிகள் காணப்படுகிறது. இவை இயற்கை முறையில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. 


இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள ஆலோசனையில் தெரிவித்துள்ளதாவது: உலக அளவில் சுமார் ஒரு லட்சம் சிலந்தி வகைகள் காணப்படுவதாகவும் இந்திய அளவில் சுமார் 1300 வகை சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து வகை சிலந்திகளும் பூச்சிகளை மட்டுமே பிரதான உணவாக உட்கொள்கிறது. வலைக்கட்டும் சிலந்திகள் வலையில் வந்து மாட்டிக்கொள்ளும் பூச்சிகளையும் மற்றவை இரையைத் தேடிச் சென்று பிடித்து உண்ணும் பண்புகளை உடையது.


ஓநாய் சிலந்தி: இந்த வகை சிலந்திகள் நெற்பயிரில் அதிகமாக காணப்படும். இவற்றின் முதுகுப்பகுதியில் மூன்று கோடுகள் காணப்படும். இது சூலம் போன்ற வடிவத்துடன் வயிற்றுப் பகுதியில் வெளிர் பழுப்பு நிறப் புள்ளிகள் இரண்டு வரிசையில் அமைந்திருக்கும். பகல் நேரங்களில் தூரின் அடிப்பகுதியில் காணப்படும் இவைகள் வலை கட்டாது. நேரடியாக தீமை செய்யும் பூச்சிகளை பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. இரவில் இரைகளை பிடித்து உண்ணும். வெண்மை நிற முட்டை கூடு பெண் ஓநாய் சிலந்தியின் வயிற்றுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்த முட்டை கூட்டில் 200 முதல் 300 முட்டைகள் வரை இடும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்தவுடன் தாயின் முதுகு பகுதியில் பெரும் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கும்.


இவை குருத்துப்பூச்சி, தத்துப்பூச்சி, இலை சுருட்டு புழு, வெட்டுக்கிளி, கொம்புப் புழு, குருத்து ஈ உள்ளிட்ட அனைத்து பூச்சிகளையும் உட்கொள்ளும்.




பைச்சிலந்தி: நெற்பயிரின் தூற்கட்டும் பருவம் வரை அதிகமாக காணப்படும். தலையின் முன்பகுதி மழுங்கிய சதுர வடிவம் உடையது. பழுப்பு நிற வயிற்று பகுதியானது முட்டை வடிவம் உடையது. இதில் வெள்ளி நிறமுடைய மெல்லிய ரோமங்கள் காணப்படும். இந்த சிலந்தி இலையின் நுனிக்கு சற்று கீழே இரையினை முதலில் கீழ்நோக்கி மடக்கியும், பின்பு மேல்நோக்கி மடக்கியும் மூன்று பகுதிகளுடைய தடுப்பாக உண்டாக்கி முட்டையிட்டு வாழும். வலை பின்னாது. இரவில் வேகமாக சென்று தீமை செய்யும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். தத்துப்பூச்சி மற்றும் குருத்து ஈக்களை இரையாக உண்ணும்.



வட்டச் சிலந்தி: உடற்பகுதி பளபளப்பாகவும் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலும் பிற அழகிய வண்ணங்களிலும் காணப்படும். பயிரின் மேற்பரப்பில் பெரிய வலையினை பின்னும். இவை வலைகளில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும். வலையில் வந்து மாட்டிக் கொள்ளும் குருத்துப் பூச்சி, பச்சை தத்துப்பூச்சி, இலை சுருட்டு புழு, வெட்டுக்கிளி மற்றும் பூச்சிகளை உண்ணும்.


சிலந்திகள் அதிக நாட்கள் உயிர் வாழும். சிலந்திகள் நூற்றுக்கணக்கில் முட்டை இட்டு இனப்பெருக்கமடைகிறது. இரை இல்லாத போது பல நாட்கள் உயிர் வாழும் திறன் பெற்றுள்ளது. சிலந்திகளுக்கு மனிதர்களை தவிர விரோதிகள் குறைவு.


வரைமுறை இன்றி பயன்படுத்தப்படும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளால் சிலந்திகள் அதிக அளவில் அழிந்து வருகிறது. பூச்சிகளின் பொருளாதார சேத நிலை அறிந்து மருந்து தெளிப்பதால் சிலந்திகள் அதிகம் அழியவில்லை என ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. சிலந்திகள் இன விருத்தி அடைந்து அதிக எண்ணிக்கையில் காணப்படும் காலங்களில் மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே சிலந்திகளை பாதுகாப்போம். இயற்கை முறையில் தீமை செய்யும் பூச்சிகளை சிலந்திக் கொண்டு கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்போம் செலவினை குறைத்து நிறைவான மகசூலையும், அதிகமான லாபத்தையும் அள்ளுவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.