தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

நெதர்லாந்துக்கு சென்றிருக்கும் பிரதமர் மோடியிடம், பல ஆண்டுகளாக அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த "சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகள்” இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகளின் வரலாறு என்னவென்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

பிரதமர் Narendra Modi 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நெதர்லாந்து சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், அங்கு பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த “ஆனைமங்கலம் செப்பேடுகள்” அவரிடம் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leiden Plates” என்றும் அழைக்கப்படும் இந்த செப்பேடுகள், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இந்திய அரசு, டச்சு அரசு மற்றும் லெய்டன் பல்கலைக்கழகம் இடையே பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்த ஒப்படைப்பு நடைபெற்றுள்ளது.

சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த வரலாற்று செப்பேடுகள் இதுவரை Leiden University பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன.

மொத்தம் 21 செப்புத்தகடுகள் கொண்ட இந்த தொகுப்பு சுமார் 30 கிலோ எடை கொண்டது. அனைத்து தகடுகளும் வெண்கல வளையத்தால் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ராஜேந்திர சோழனின் அரச முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. அதாவது கி.பி 985 முதல் 1014 காலகட்ட சோழர் வரலாற்றை பதிவு செய்யும் முக்கிய ஆவணமாக இது பார்க்கப்படுகிறது.

இந்த செப்பேடுகளில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
சமஸ்கிருத பகுதியில் சோழர் வம்ச வரலாறும், அரச மரபும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்த “சூடாமணி விஹாரம்” என்ற புத்த மத மடாலயத்திற்கு நிலங்களும் வரிவிலக்குகளும் வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்த விஹாரத்தை, இன்றைய இந்தோனேஷியாவில் இருந்த ஸ்ரீவிஜய அரசின் மன்னர் கட்டியதாகவும், அதற்கு சோழர்கள் ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்த காலத்திலேயே தமிழ்நாடு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே கடல் வாணிபம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் மத நல்லிணக்கம் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரமாக இந்த செப்பேடுகள் பார்க்கப்படுகின்றன.

1700களில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி நாகப்பட்டினத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில், டச்சு மதபோதகர் ஒருவரின் கைகளுக்கு இந்த செப்பேடுகள் சென்றதாக கூறப்படுகிறது.பின்னர் 1862ஆம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிய வரலாற்று ஆவண சேகரிப்பில் சேர்க்கப்பட்டன.

அதன்பிறகு பல ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த செப்பேடுகளை மீட்க இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வந்தது.

தற்போது அந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் வரலாற்றின் முக்கிய சாட்சியாக இருக்கும் இந்த செப்பேடுகள் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளன.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola