"யாரும் பனையூருக்கு வராதீங்க" வெகுண்டெழுந்த மக்கள் தவெகவினருக்கு தலைமை உத்தரவு | Vijay
``இனி யாரும் பனையூருக்கு வராதீங்க"வெகுண்டெழுந்த மக்கள் த.வெ.க-வினருக்கு தலைமை உத்தரவு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் விருப்பமனு அளிக்கும் பணிகள் தொடங்கிவிட்டது. அந்த வரிசையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் நிர்வாகிகள் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 14 -ம் தேதி வரை கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி, த.வெ.க-வைச் சேர்ந்தவர்கள் விருப்பமனுக்களை வாங்க நேற்று பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், தங்களின் வாகனங்கள் வெளியே கொண்டு போக முடியாத அளவுக்கும் உள்ளே கொண்டு வரமுடியாத அளவுக்கும் தவெக-வினர் இடைஞ்சல் ஏற்படுத்துவதாக போலீஸிடம் தெரிவித்தனர். போலீஸ் வந்து தவெக-வினர் மத்தியில் அறிவுரை வழங்கியபோதும் நிலைமை சரியாகதாதல், அப்பகுதி மக்கள் த.வெ.க அலுவலகம் முன்பு கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த நிலையில், விருப்பமனு பெற யாரும் பனையூர் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. மேலும், கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ள கூகுள் லிங்க் மூலம் விருப்பமனுவை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் கட்சி தெரிவித்திருக்கிறது.























