சதுரங்க வேட்டை COUPLE! நண்பர்களுக்கே ஆப்பு! விசாரணையில் திடுக் தகவல்
சதுரங்க வேட்டை பட பாணியில் விதவிதமாக பேசியே மற்றவர்களை வலையில் விழ வைத்து லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிய தாய், மகனை மற்றும் காதலி போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர். எனது அப்பா POLICE என்பதை சொல்லியே தில்லாலங்கடி வேலை பார்த்துள்ளார் அவரது மகன்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஐயனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலூர் கலால் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகனான 25 வயதான நிதிஷ் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பணம் சம்பாதிப்பது எப்படி என மற்றவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். கிரிப்டோ கரன்சி, டிரேடிங், ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி 1 போட்டா 2 கிடைக்கும் பணத்தை என்னிடம் முதலீடு செய்யுங்கள் என உறவினர்கள் மற்றும் நண்பர்களை நம்ப வைத்து பண மோசடி செய்துள்ளார். அப்பா இன்ஸ்பெக்டர் என்பதால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது நம்பி பணத்தை முதலீடு செய்யுங்கள் என்றும் சிலரிடம் நம்பகத்தன்மையோடு பேசிய காரணத்தினால் அதை நம்பி பலரும் பணத்தை கொடுத்துள்ளனர்.
தனது நண்பர்களையே ஏமாற்றி ஆன்லைனில் டிரேடிங் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என சொல்லி 69 லட்சம் ரூபாயை சுருட்டியுள்ளார். பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நிதிஷ் கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவரது பெயரில் கம்பெனி ஒன்றையும் ஆரம்பித்து இருவரும் சேர்ந்து ஏராளமானோரை முதலீடு செய்ய வைத்து பணத்தை மோசடி செய்து வந்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அதற்காக சென்னை நீதிமன்றத்திற்கு சென்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. விசாரணையில் நிதிஷின் தாய்க்கும் இதில் சம்பந்தம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்தநிலையில் 69 லட்சம் மோசடி செய்த குற்றத்திற்காக தாய் மகன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நிதிஷின் தந்தையான இஸ்ன்பெக்டருக்கும் இதில் சம்பந்தம் உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது.