இதைத்தான் அப்போதே எச்சரித்தோம் NEET ஒழிப்பே நிரந்தர தீர்வு ஸ்டாலின் வலியுறுத்தல்
டெல்லியில் நீட் தேர்வுக்கெதிரான இளைஞர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நீட்டை ஒழிப்பதே இதற்கு ஒரே தீர்வு என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவை விலக வேண்டும் என்று போராட்டாக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், திங்களன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி போலீஸார் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
போலீஸின் இந்தக் கொடூர தாக்குதலைக் கண்டித்தும், நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை போன்ற நகரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், நீட்டை ஒழிப்பதே அனைத்துக்குமான தீர்வு என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "புது டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தற்போது முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில் நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.
சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்குத் தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது: அது நீட்ஒழிப்பு.
மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும்" என்று வலியுறுத்தியுள்ளார்.