கோவை பெண் பாலியல் கொடூரம் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் நடந்தது என்ன? | Kovai Student Sexual Assault

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை விமான நிலையம் பின்புறம் நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் காரில் தனிமையில் இருந்த  கல்லூரி மாணவி 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன் அவருடன் இருந்த வாலிபரும் அரிவாளால் வெட்டப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவான நிலையில் இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க  ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.அதில் சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதில்  மூன்று பேர் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர்கள் கீழே  விழவே அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 
குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன்  என்பது தெரியவந்தது.

பின்னர்  காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார்  அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய  குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய  இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது.போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. அதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும், இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு,வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட  பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு  பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola