Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

Continues below advertisement

வியூகமே இல்லாமல் தேர்தல் பொறுப்பு கொடுத்தால் என்ன செய்ய முடியும் என ஆர்எஸ்எஸ் மீட்டிங்கில் அண்ணாமலை வெளிப்படையாகவே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை சரிகட்ட முக்கிய பதவி ஒன்றை கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.

சிங்காநல்லுார், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலையை அறிவித்தார் நயினார் நாகேந்திரன். ஆனால் தனது தந்தையின் உடல்நலத்தை காரணம் காட்டி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அண்ணாமலை. இது பாஜக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 6 தொகுதிகள் மட்டுமே கொடுத்ததால் தான் அதிருப்தியில் அண்ணாமலை பதவியை தூக்கியெறிந்ததாக விமர்சனம் வலம்வந்தது. சட்டப்பேரவை தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி வந்தது.

இந்தநிலையில் தமிழ்நாடு வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதில் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. அங்கும் அண்ணாமலை விவகாரம் விவாதிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என முடித்து வைத்தார் பி.எல்.சந்தோஷ்.

அதற்கு பதிலாக RSS தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டார். அண்ணாமலை உள்ளிட்ட 13 பேரை மட்டும் வரவைத்து RSS நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பதவியில் இருந்து விலகியது தொடர்பாக விளக்கம் கேட்டதற்கு, அண்ணாமலை உடனே வியூகத்தை சொல்லுங்கள், திமுகவை வீழ்த்துவதற்கு எந்த வியூகமும் இல்லாமல் எப்படி களத்தில் சென்று தேர்தல் பணியாற்ற முடியும் என கேட்டதாக தெரிகிறது. எந்த ஒரு ப்ளானும் இல்லாமல் எந்த அடிப்படையில் தனக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியதாக சொல்கின்றனர். 6 தொகுதிகள் ஒதுக்கியதால் தான் அதிருப்தியில் அண்ணாமலை விலகியதாக பேச்சு அடிபட்ட நிலையில், எண்ணிக்கை முக்கியமில்லை, வியூகத்தை தெளிவாக சொன்னால் ஒரு தொகுதியில் கூட தேர்தல் பணியாற்ற தயார் என அண்ணாமலை சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக பாஜகவின் வாக்கு சதவீதம் வளர்ச்சிக்கு அண்ணாமலையும் காரணம் என்பதால் 2026 தேர்தலிலும் அண்ணாமலையை பயன்படுத்த வேண்டும் என பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. கூட்டணிக்கும் பிரச்னை வராமல் உட்கட்சியிலும் பஞ்சாயத்து வராமல் அண்ணாமலைக்கு பதவி கொடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அண்ணாமலைக்கு சக்தி கேந்திராவின் தலைவர் அல்லது தலைமை பொறுப்பாளர் பதவி வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் கட்சி இரண்டாக பிரிந்து மோதிக் கொள்ளாமல் இருக்க அண்ணாமலைக்கு விரைவில் பதவி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola