Shivaji Krishnamoorthy Arrest | 3 ஆண்டுகள் சிறை!சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது?ஆளுநர் குறித்து அவதூறு
பொது மேடையில் ஆபாசமாக பேசியது ஆளுநர் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 ஜூன் 16ஆம் தேதி சென்னை கொடுங்கையூரில் முன்னாள் முதlவர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை பெற்றது. இதனையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆபாசமாக பேசுவது, கலகத்தை துாண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஆபாசமாக பேசியதற்கு 3 மாதம் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்சாட்டில் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.