Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரியில் கடற்கரைக்கு ரீல்ஸ் எடுக்க சென்ற பெண் ஒருவர் தவறி விழுந்து பாறை நடுவே சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயனைப்பு வீரர்கள் அப்பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர்.
விடுமுறை தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், நகரமே மக்கள் கூட்டத்தால் திணறி வருகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடற்கரை ஓரங்களிலும், கிடைத்த இடங்களிலும் படுத்து ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், நகரில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்குச் சுற்றுலா வந்த சென்னை பேராசிரியை வைஷ்ணவி என்பவர், எதிர்பாராத விதமாக கடற்கரை மணல் பரப்பில் உள்ள பாறை இடுக்கில் தவறி விழுந்து சிக்கிக்கொண்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் அவரை மீட்க நீண்ட நேரமாகப் போராடினர். எனினும் பாறை இடுக்கில் சிக்கியிருந்த அவரை எளிதில் மீட்க முடியாத சூழல் ஏற்பட்டது. ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் அந்தப் பெண் பேராசிரியையை சுமார் ஒரு மணி நேரம் பிறகு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் அப்பகுதி மீனவர்களுடன் இணைந்து மீட்டெடுத்தனர் தொடர்ந்து தற்போது அவர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ரீல்ஸ் மோகத்தில் பெண் ஒருவர் கடற்கரையில் பாறைக்கு நடுவே சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது