ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்
அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆட்சி என மீண்டும் சொல்லி கூட்டணிக்கான கதவுகளை திறந்துள்ளார் விஜய். திமுகவை குறிவைத்தும் தனது கடிதத்தில் விமர்சனங்களை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் விஜய். தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என கைகாட்டினார். கட்சி உறுப்பினர் சேர்க்கை, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி கொடுப்பது என தவெகவில் விறுவிறுப்பாக வேலை நடந்து வருகிறது. தவெகவை ஆரம்பித்து இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ள நிலையில் தனது கட்சியினருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். இன்று. ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது. அதில்தான். கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை. மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.
இதோ. இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை. ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல். எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று. நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம். குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை. மக்கள் பிரச்சனைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம். காரணம், தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது. மக்களரசியல் மட்டுமே.
தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான். நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும். அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, நமது வலிமையை நாட்டுக்குப் பறைசாற்றி, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம். அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி. நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும்.
மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான். தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும். கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும். வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி” என கூறியுள்ளார்.
மாநாட்டிலேயே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் என விஜய் பேசியது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆட்சியில் பங்கு வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து குரல் வந்த நேரத்தில், விஜய்யும் அதையே சொன்னது விசிகவுக்கான கூட்டணி அழைப்பா என கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது கடிதத்தில் அதையே மீண்டும் சொல்லி கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளார் விஜய்.