Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கை

விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அக்கட்சியின் மற்றொரு துணைப்பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனை  நேரடியாக தாக்கி இருப்பது விசிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எல்லோருக்குமான தலைவர் அம்போத்கர் புத்தக வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது, விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தான் இந்த புத்த்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. ஆனால் இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கவில்லை. தவெக தலைவர் விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட உள்ள நிலையில், ”நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள்”என்று கூறி ஆதவ் அர்ஜூனை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார் வன்னி அரசு.


அதில்,”நாளை டிசம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில். திமுக கொடுத்த நெருக்கடியால்தான் திருமாவளவன் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள். 

2001 ஆம் ஆண்டு முதன்முறையாக திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குப் போனார் திருமாவளவன் அவர்கள். 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினமா செய்தார். பதவிதான் வேண்டுமென்றால் திமுக தலைவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்திருக்கலாம்.

ஆனால்,கொள்கை முக்கியமெனப் பதவியைத் துறந்தவர் திருமா.அப்படிப்பட்டக் கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல முடியும் என சில தரகர்கள் முயற்சிப்பது அரசியல் சோகமாகும். தமிழ்நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைத்து  அரசியல் செய்ய முயற்சிக்கின்றன. அம்பேத்கர் குறித்த  நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என திருமாவளவன்  கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார். 


ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது. ”என்று கூறியுள்ளார். விசிக துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனை வன்னி அரசு கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது விசிக வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola