
EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டை
முன்னாள் எம்எல்ஏ பிவி கதிரவனின் காரை சுங்கச்சாவடியில் செல்ல விடாமல் தடுத்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம் எல் ஏவின் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன். இவர் கடந்த 2011ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வேர்ட் பிளாக் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் இருக்கிறார். இந்நிலையில் தஞ்சாவுரில் கட்சியினரின் விழாக்களில் கலந்து கொண்டு விட்டு துவரங்குறிச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக அவரது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பரளி அருகே உள்ள சுங்க சாவடியில் அவரது காரை நிறுத்திய பணியாளர்கள் கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்னை அனுமதியுங்கள் என்று கூறியுள்ளார். அ
தற்கு பணியாளர்கள் அவ்வாறெல்லாம் அனுமதிக்க முடியாது பணத்தை கட்டி விட்டு ஒழுங்காக செல் என்று மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. மீண்டும் நான் ஒரு கட்சியின் தேசிய துணைதலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண சலுகை வழங்கப்படாது என உங்களது மேனேஜரிடம் சொல்லி எனக்கு கடிதம் வாங்கி கொடுங்கள். நான் இரட்டிப்பு பணம் செலுத்தி சுங்கச்சாவடியை கடந்து செல்கிறேன் என கூறியுள்ளார்.
அதையும் ஏற்க மறுத்த பணியாளர்கள் நீ யாரிடம் வேண்டுமென்றால் சொல்லிக்கொள் பணம் கட்டாமல் இங்கிருந்து செல்ல முடியாது என மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் அவரது காரை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தகாத வார்த்தையில் பேசிய சுங்க சாவடி பணியாளர்கள் கோசலபூபதி, மணிகண்டன், அழகர் ஆகிய மூவரையும் விசாரணைக்காக நத்தம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.