TN Cabinet Reshuffle : ஆளுநர் RN ரவிக்கு ஸ்கெட்ச்..களத்தில் இறங்கும் PTR?ஸ்டாலின் மாஸ்டர் STROKE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆளுநர் RN ரவிக்கு ஸ்கெட்ச்... களத்தில் இறங்கும் PTR? ஸ்டாலின் மாஸ்டர் STROKE
தமிழக அமைச்சரவை மாற்றத்தில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜணின் இலாக்கா மாற்றபட இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் அவருக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு செக் வைக்கும் விதத்தில் உயர்கல்வி துறையை பிடிஆருக்கு வழங்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
தமிழக முதல்வராக 2021ல் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, அமைச்சருக்கு இலாக்காக்கள் ஒதுக்கியதில் பலருக்கு பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தாலும், அனைவருமே சரியான தேர்வு என்று கிரீன் டிக் அடித்தது நிதித்துறை அமைச்சகத்தை பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இடம் வழங்கியதை தான். காரணம் சர்வதேச அளவில் பெரும் நிறுவனங்களான லெஹ்மன் பிரதர்ஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியாகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிகுந்தவர் பி டி ஆர். நிதித்துறையில் தமிழக கேபினேட்டில் இவருக்கு நிகரான அனுபவம் கொண்டவர் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில்தான் தமிழ்நாடு நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி டி ஆர் தமிழகத்தின் நிதிநிலையை சரிவிலிருந்து மீட்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது, அவரும் பொறுப்பேற்ற மூன்றே மாதத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் இதை சரி செய்து தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வருவேன் என்றும் சூழுரைத்தார்.
இந்நிலையில் நிதித்துறையில் இருந்து தான் தமிழகத்தின் மற்ற அனைத்து துறைகளுக்குமே பணம் செல்ல வேண்டும் என்ற நிலையில், செலவை கட்டுப்படுத்தும் வகையில் பிடிஆர் கராராக நடந்து கொள்வதாக சில அமைச்சர்கள் தலைமையிடம் புகார் அளித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இயங்கும் பி டி ஆர், ஈஷா விவகாரம் தொடங்கி பலரின் கருத்துக்களுக்கு எதிர்வணையாற்றுவது அது பின்னர் சர்ச்சையாக உருவெடுப்பது என்ற நிலை இருந்தது.
இது போன்ற பல்வேறு புகார்கள் தலைமையின் காதுக்கு சென்றாலும் பி டி ஆர் தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக நீடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் கடந்த ஆண்டு பிடிஆர் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது, அது முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் இரண்டே ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்து விட்டனர் என்று கூறுவது போல் பேச்சுக்கள் இடம் பெற்று இருந்தது.
இந்நிலையில் அது தான் பேசியது இல்லை, அந்த ஆடியோ பொய்யானது என பி டி ஆர் விளக்கம் அளித்தார்.ஆனால் அடுத்த சில நாட்களிலேயே நிதித்துறை அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு தகவல் தொழில்நுட்ப துறை அவருக்கு வழங்கப்பட்டது. நிர்வாக ரீதியிலான மாற்றம் என்று திமுக தரப்பில் அவர்கள் சொன்னாலும், பி டி ஆர் இன் ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான அப்சட்டில் இருப்பதாகவே செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பை வழங்கியதற்காக நன்றி தெரிவித்த பி டி ஆர், அதன் பிறகு தன்னுடைய பாணியை மாற்றிக் கொண்டு சர்ச்சைகளில் சிக்காமல் தனக்கு வழங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தை சிறப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில்தான் அண்மையில் சென்னையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதித்துறையில் இருந்து மாற்றினேன் தெரியுமா என்று முதல் முறையாக வாய் திறந்தார். அதில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் புகழ்ந்து பேசிய ஸ்டாலின், நிதி அமைச்சர் ஆக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி டி ஆர். நிதித்துறை போன்றே ஐடி துறையிலும் மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதற்காகவே பி டி ஆர் ஐ மாற்றினேன் என்று தெரிவித்தார்.
இதன் மூலமாக ஸ்டாலினுக்கு பி டி ஆர் மீது இருந்த கோபம் நீங்கி விட்டது, மீண்டும் முதல்வரின் குட் புக்கில் பி டி ஆர் இடம் பிடித்து விட்டார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன், திமுக அமைச்சரவையில் மாற்றத்தை செய்ய ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடைய இலாக்காவும் மாற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மீண்டும் நிதி துறையை பிடிஆர் இடம் வழங்குவாரா ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் ஸ்டாலின் வேறு விதமான ஒரு யோசைனையில் இருப்பதாக சொல்லபடுகிறது, அதாவது தொடர்ந்து தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் ஆளுநர் ஆர்.என் ரவி. அவரை சமாளிக்க வேண்டும், அதே நேரம் டாக்டிலாக அவருக்கு பதிலடியும் கொடுக்க வேண்டும். அதற்கு பிடிஆர் சரியாக இருப்பார் என்று ஸ்டாலின் எண்ணுகிறார்.
அந்த வகையில் பொன்முடியிடம் இருக்கும் உயர்கல்வித்துறையை, பிடிஆர் இடம் வழங்கி, ஆர்.என் ரவிக்கு செக் வைக்க நினைக்கிறார் முதல்வர். அதே நேரம் பொன்முடிக்கு மின்வாரிய துறை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு அனைத்துமே ஜூன் 11ஆம் தேதி வெளியாகும் என்று திமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வரும் நிலையில், பிடிஆர்-க்கு எந்த பொர்ட்போலியோ வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.