தாமதமாகும் DGP நியமனம்! மத்திய அரசு கொடுத்த LIST! கடுப்பான தமிழக அரசு
புதிய டிஜிபியை இன்னும் நியமிக்காமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என அமைச்சர் ரகுபதி அட்டாக் செய்துள்ளார். தங்களுக்கு வேண்டியவர்களை முன்மொழிந்து மத்திய அரசு ஒரு லிஸ்ட் அனுப்பியதாகவும் அதனை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும் என்ன நடந்தது என்பது தொடர்பாக முழு விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. டிஜிபி நியமனத்தை பொறுத்தவரை சீனியர் ரேங்கில் உள்ள 8 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசு தயார் செய்து யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு அனுப்பும். அந்த பட்டியலில் மூவரை தேர்ந்தெடுத்து யுபிஎஸ்சி மீண்டும் மாநில அரசுக்கு அனுப்பும். அதில் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசு தேர்ந்தெடுக்கும், இதுதான் நியமன முறை. இதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தமிழக அரசு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்தது.
சட்டப்பேரவை தேர்தலுக்காக தான் புதிய டிஜிபியை நியமிக்காமல் திமுக தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ். 8 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பவே இல்லை என்ற விமர்சனமும் வந்தது. இந்தநிலையில் மத்திய அரசின் அடாவடியால் தான் டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி விவரங்களை உடைத்துள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், ‘தங்களுக்கு ஏற்ற நபரைத தேர்தல் நோக்கத்திற்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே டிஜிபி நியமனத்தில் காலதாமதம் செய்யப்படுகின்றது என்றும் வழக்கம்போல் அடிப்படையில்லாமல் பேசியிருக்கிறார் இபிஎஸ். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்த காரணத்தால்தான், புதிய டி.ஜி.பி. நியமனத்திற்கான பட்டியல் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உரிய காலத்தில், அனுப்பி வைக்க இயலவில்லை என்ற அடிப்படை உண்மையைக் கூட அவர் தெரிந்து கொள்ள முற்படவில்லை. வழக்கு முடிந்தபின்னர் எந்தவிதக் காலதாமதமும் இன்றி அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கூட்டத்தில், விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டது குறித்து, தமிழ்நாடு அரசு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு பழனிசாமி போல அமைதி காக்க முடியாது.
இருப்பினும், மாநில சட்டம் - ஒழுங்குக்குப் பொறுப்பான தமிழ்நாடு அரசின் கருத்துகளை ஏற்காமல், தாங்கள் விரும்பியவர்களையே முன்மொழிந்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பட்டியலை அனுப்பி வைத்தது. இந்தப் பட்டியல் தமிழ்நாடு அரசால் ஏற்கத்தக்கதாக இல்லாத நிலையில், அதற்கான காரணங்களை முழுமையாக விளக்கி, தலைமைச் செயலாளர் அவர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதற்கான பதில் இன்னும் பெறப்படாத நிலையில், “ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்” என்ற கதையாக மாநிலச் சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு தனக்கு வேண்டப்பட்ட நபரை புதிய டி.ஜி.பியாக அமர்த்த வேண்டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்சினை. சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களைப் புறக்கணித்து தனக்கு வேண்டப்பட்ட நபர்களைத் தமிழ்நாட்டில் டி.ஜி.பி.ஆக அமர்த்துவதற்கு ஒன்றிய அரசு முயலும் அடாவடிதான் புதிய டிஜிபி நியமனத்தில் தமிழ்நாடு அரசு சந்திக்கும் பிரச்சினை. தற்போது புதிய டி.ஜி.பி. நியமனத்தைக் குறை கூறும் திரு. பழனிசாமி அவர்கள், தாம் வணங்குவதாகக் கூறும் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் எந்த சட்டப் பிரச்சினையும் இல்லாத போதே, எத்தனை மாதங்கள், எத்தனை ஆண்டுகள் டி.ஜி.பி. இல்லாமல் அரசை நடத்தினார் என்பதை விரல் விட்டு எண்ணிப் பார்க்க வேண்டுமே தவிர மாநில உரிமைகளுக்காகப் போராடும் முதலமைச்சரைக் குறை கூறுவதா?” என விமர்சித்துள்ளார்.