Sengottaiyan vs EPS : தலைமை தாங்கும் செங்கோட்டையன்?தனித்து விடப்பட்ட எடப்பாடி!பின்னணியில் பாஜக?
இபிஎஸ்-க்கும் செங்கோட்டையனுக்கும் இடையேயான மோதல் போக்கு வெட்டவெளிச்சம் ஆகியுள்ள நிலையில், பாஜகவின் ஆதரவுடன் அதிமுகவை தலைமை தாங்கும் முயற்சியை செங்கோட்டையன் தொடங்கியுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் புயலைகிளப்பியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளின் பாராட்டு விழா நடத்திய போது அதை புறக்கணித்தார் செங்கோட்டையன். அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்த செங்கோட்டையன் இப்போது சட்டப்பேரவையிலும் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக புறக்கணித்துள்ளார். இதன் மூலம் எடப்படி பழனிசாமி மீது அவருக்கு உள்ள அதிருப்தி வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
முன்னதாக பாஜக கூட்டணியில் அதிமுக இணைவதற்கான முட்டுக்கட்டையாக எடப்பாடி பழனிசாமி தான் இருக்கிறார். மற்ற நிர்வாகிகள் எல்லோரும் பாஜகவுடன் நெருக்கமாகவே இருக்கின்றனர். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர உள்ள சூழலில் எடப்பாடி இப்படி முரண்டு பிடிப்பதல கூட்டணி அமையாமல் போனால் அது பாஜகவிற்கு தான் இழப்பாக அமையும். அதனாலயே அதிமுக உடன் கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக இபிஎஸ் தலைமை தாங்கும் வரை அது நடக்காது என்பதால் அதற்கு மாற்றாக மற்றொரு அணியை உருவாக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
இந்த சூழலில் தான் இபிஎஸ் உடனான அதிருப்தி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாஜகவின் ஆதரவுடன் அதிமுகவை தலைமை தாங்கும் முயற்சியில் செங்கோட்டையன் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கத்தை அமமுக பொதுச்செயலாலர் டிடிவி தினகரன் , சசிகலா உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்கள். அதேபோல், ஓபிஎஸ்-ம் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. டிடிவி மற்றும் ஓபிஎஸ் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சூழலில், நேற்று செங்கோட்டையனும் ஓபிஎஸ்- உடன் ரகசிய சந்திப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியன நிலையில், இவர்கள் அனைவரையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுவருவதாகவும் பாஜக ஆதரவுடன் அதிமுகவை தலைமை தாங்க போகும் செங்கோட்டையன் ரெடியாகி வருவதாகவும் வெளியாகியுள்ள தகவல் தான் தமிழக அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.