ABP News

Sengottaiyan,Seeman Meets Nirmala | ”செங்கோட்டையன், சீமான் நிர்மலாவுடன் திடீர் சந்திப்பு”நடு இரவில் பேசியது என்ன?

Continues below advertisement

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை கிண்டி தனியார் ஓட்டலில் அடுத்தடுத்து சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த கூட்டணி அமைவதற்கு ஆதரவாக பல அதிமுக தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்திருந்தார். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவரை, நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மீண்டும் நிர்மலா சீதாரமனை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதன் மூலம் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவிற்கு எதிராக அதிமுக - பாஜக-நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையுமோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் வெற்றிக்கான ஆதரமாக அதன் கூட்டணியே கருதப்படுகிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தற்போது வரை, திமுகவின் வலுவான கூட்டணி தொடர்கிறது. அதற்கு நிகரான கூட்டணி அமைத்தால் மட்டுமே, திமுகவை வீழ்த்த முடியும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் தான் அதிமுக - பாஜக-நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால், அது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.

கடந்தமுறை செங்கோட்டையன் டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்ததே தனக்கு தெரியாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் தான் மீண்டும் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் சந்தித்துள்ளார். கட்சி தலைமைக்கே தெரியாமல் நிகழும் அவரின் செயல்பாடுகள் கட்சி தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா உடனான சந்திப்பின் போது கூட்டணி அமைக்க எடப்பாடி சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. அதனை பாஜக தலைமை விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விளைவாகவே செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை கொண்டு, எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டு வர பாஜக திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசை சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், அண்மைக்காலமாகவே பாஜக மீதான விமர்சனத்தை அவர் குறைத்துள்ளார். அதற்கு நடிகை தொடர்பாக அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதே காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நிர்மலா சீதாராமன் மற்றும் சீமான் இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram