வருங்கால துணை முதல்வரே” பற்றவைத்த பாஜகவினர்! மேடையிலேயே பதறிய நயினார்
”வருங்கால துணை முதல்வரே” என பாஜக மாவட்ட தலைவர் சொன்னதும் உடனே பதறிய நயினார் நாகேந்திரன், அப்படியெல்லாம் சொல்லக் கூடாது என மேடையிலேயே வைத்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27 ஆம் தேதி ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ராஜேந்திர சோழனின் 1005வது பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டத் தொடங்கியதன் ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றை சேர்த்து முப்பெரும் விழா கொண்டாட்டப்படுகிறது. 27ம் தேதி நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாஜக சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய அரியலூர் பாஜக மாவட்ட தலைவர் பரமேஷ்வரி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களே என சொன்னதும் வருங்கால துணை முதல்வரேன்னு சொல்லுங்கள் என்று கூட்டத்தில் இருந்து குரல் வந்தது. உடனடியாக பரமேஸ்வரியும் அதையே சொன்னதும் பதறிய நயினார், அப்படி சொல்லக் கூடாது என மேடையிலேயே வைத்து ஆர்டர் போட்டார்.
ஏற்கனவே கூட்டணி ஆட்சி விவகாரம் அதிமுக பாஜக இடையே உரசலை கொண்டு வந்துள்ள நிலையில், துணை முதல்வர் என புது விவகாரத்தையும் கையில் எடுக்கக் கூடாது என நினைத்து நயினார் நாகேந்திரன் உடனடியாக தடுத்ததாக சொல்கின்றனர்.