NTK Cadre Murder | நாம் தமிழர் நிர்வாகி வெட்டிக்கொலை! பரபரக்கும் மதுரை.. பின்னணி என்ன?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கும் முன் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலையின் பின்னனி குறித்த தீவிர விசாரணைகள் நடந்து வருகிறது.இந்நிலையில், தற்போது மதுரையில் அடுத்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பாலசுப்ரமணியன். மதுரை வடக்குத்தொகுதி துணைச்செயலாளராக இருந்த பால சுப்ரமணியனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று அதிகாலை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். தப்பிக்க முயன்றபோதும் அவர் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகிலேயே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை தொடர்பாக, மதுரை கமிஷனர் நேரடியாக விசாரணை நடத்துகிறார். கொலை செய்யப்பட்டவர் 3 கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. குடும்ப பிரச்னை காரணமாக கொலை நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதும், கொலைவெற் தாக்குதலுக்கு ஆளாவதும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்ட-ஒழுங்கின் நிலை குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.