”வாய முடிட்டு இருங்க” முகத்துக்கு நேர் கேட்ட ஸ்டாலின்! வாயடைத்து போன அமைச்சர்கள்MK Stalin warn

கட்சிக்கும், அரசுக்கும் கெட்ட பெயர் வரும்படி அமைச்சர்கள் யாரும் பேசசே கூடாது, இனி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் பொன்முடியை வைத்துக் கொண்டே கண்டித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திமுகவின் முக்கிய புள்ளிகள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் பேசி வரும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு தலைவலியாக மாறிவிடுகிறது. ஸ்டாலினே ஒருமுறை மேடையிலேயே வைத்து அமைச்சர்கள் பேசுவதால் வரும் சிக்கல்களை சொல்லி புலம்பினார்.

பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து ஆபாசமாக பேசிவரும் பொன்முடியை இப்படியே விட்டுவைத்தால் சரிப்பட்டு வராது என்று அவர் வகித்து வந்த திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை பறித்தார். அதுவும் விலைமாதர்கள் பற்றி பொன்முடி பேசியது திமுகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.

அதேபோல் அமைச்சர் துரைமுருகனும் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் பற்றி பேசிய விஷயங்கள் சர்ச்சையானது. ஸ்டாலினே 2 பேரையும் நேரடியாக கண்டித்ததால் இருவருமே தாங்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டனர். அதுவும் பொன்முடி அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு இதுதான் கடைசி வாய்ப்பு என ஸ்டாலின் எச்சரித்தாக தகவல் வெளியானது. 

இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வைத்து அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்களை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு கெட்ட பெயர் வரும்படி அமைச்சர்கள் யாரும் பேசவே கூடாது என பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்களை வைத்துக் கொண்டே ஸ்டாலின் கறாராக சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது நிலைமை சரியில்லை, தேர்தல் நேரத்தில் அதற்கான வேலைகளை பார்க்க வேண்டும், அமைச்சர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அமைச்சர்கள் சர்ச்சையாக பேசுவதை நிறுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் தயாராக இருப்பதாக சொல்கின்றனர். 

ஏற்கனவே சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ஸ்டாலினை சந்தித்த பொன்முடி தெரியாமல் பேசிவிட்டேன், இனி இப்படி நடக்காமல் பார்த்து கொள்கிறேன் என உறுதி கொடுத்ததாக தகவல் வெளியானது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நேரத்தில் சர்ச்சையாக பேசி அவர்களுக்கான வாய்ப்பாக அதனை மாற்ற இடம் கொடுத்துவிடவே கூடாது என்பதில் ஸ்டாலின் முடிவாக இருப்பதாக சொல்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola