
Minister Ponmudi : பொன்முடிக்கு போர்க்கொடி! குரலை உயர்த்திய புஷ்பராஜ்! ரசிக்கும் லட்சுமணன்?
விழுப்புரத்தில் விழா ஒன்றில் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் எப்போதும் வாய்திறக்காத முன்னாள் எம் எல் புஷ்பராஜ் தன்னை பேச அழைக்கவில்லை என மேடையிலையே கோவமாக சண்டையிட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளராகவும் இருந்த புகழேந்தி கடந்தாண்டு மார்ச் 6ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி விழுப்புரம் அருகிலுள்ள அத்தியூர் திருவாதி கிராமத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் மறைந்த புகழேந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்த நிகழ்ச்சியில் இருவரும் உரையாற்றினர். இந்நிகழ்வில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஜெகத்ரட்சகன் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி பற்றி உருக்கமாக பேசினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். இதன் பின்னர்
பேசுவதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜை அழைப்பதற்கு பதிலாக விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா பேச அழைக்கப்பட்டார். உடனடியாக புஷ்பராஜ் என்னை ஏன் பேச அழைக்கவில்லை, நான் பேசக்கூடாதா என கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை சமாதானப்படுத்திய அன்னியூர் சிவா, முன்னாள் எம் எல் ஏ புஷ்பராஜை பேச வைத்தார்.
இதுவரை வாய் திறக்காமல் சைலண்ட்டாக இருந்து வந்த முன்னாள் எம் எல் ஏ புஷபராஜ் தற்போது பொன்முடி முன்னிலையில் மேடையிலேயே வாக்குவாதம் செய்தது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.