Mamata Letter to Modi : ”15 நாள் தான் Time!”மோடிக்கு மம்தா பரபரப்பு கடிதம் பாலியல் வன்கொடுமை சம்பவம்

நாடு முழுவதும் தினமும் கிட்டத்தட்ட 90 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் எனக்கோரி மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மேற்குவங்கம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இரவில் பணியில் இருந்த மற்ற நான்கு மருத்துவர்களுக்கும் முன்னாள் கல்லூரி முதல்வருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது.

"மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும் பல வழக்குகளில் கொலையுடன் கூடிய பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன. நமக்கு கிடைத்துள்ள தரவுகளின்படி, நாட்டில் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என்பது அச்சமூட்டுகிறது. இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும், மனசாட்சியையும் உலுக்குகிறது. பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமையாகும்.

இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்." இவ்வாறு மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola