ABP News

Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!

Continues below advertisement


நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் நாதகவில் இருந்து விலகிய நிலையில், அவர் தவெக வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாளை நடக்கவுள்ள தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மேடையிலே அந்த நிகழ்வு அரங்கேற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் ஆளுமைகளுள் ஒருவர் காளியம்மாள். அவர் மேடைகளில் பேசினாலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் தேர்தல் பிரச்சாரங்களாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாணியை கொண்டிருப்பவர். ஆனால் காளியம்மாளை சீமான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்றும், சில மாதங்களாக அவரை ஓரங்கட்டி வைப்பதாகவும் விமர்சனம் வலம் வரத்தொடங்கின. மேலும் கட்சிப்பணிகளில் இருந்தும் காளியம்மாள் ஒதுங்கியே இருந்தார்.


பின்னர் காளியம்மாளை மேடையிலேயே வைத்து சீமான் கடிந்து கொண்டார். முன்னதாக காளி என் சாமி என்று கூறியவர் அவரை பிசிறு எனக்குறிப்பிட்டு சங்கடப்படுத்தினார்.  இதனையடுத்து காளியம்மாள் நாதக வை விட்டு விலகுவதாக செய்திகள் வெளிவரத்தொடங்கின. ஆனாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ரகசியம் காத்து வந்தார் காளியம்மாள். இந்நிலையில் தான் சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் காளியம்மாள் பெயருக்கு அருகில் கட்சியின் அடையாளம் எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது மௌனம் கலைத்த காளியம்மாள் நாதகவை விட்டு விலகுகிறீர்கள் என்ற கேள்விக்கு விரைவில் நானே சொல்கிறேன் என பதிலளித்தார்.அவர் நாதகவை விட்டு விலகுவதும் உறுதியானது. இந்நிலையில் நேற்று நாதகவை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் காளியம்மாள். 

முன்னதாக திமுக பக்கம் செல்வாரோ தவெக பக்கம் செல்வாரோ என குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், தமிழ் தேசியம் வழியில் பயணிப்பேன் என அவர் அறிக்கையில் தெரிவித்து தனது பயணம் தவெக உடன் தான் என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. நாதக கட்சியில் காளியம்மாள் அதிருப்தியில் இருந்தது தெரிய வரவே விஜய் தரப்பில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததாகவும், காளியம்மாளுக்கு முக்கிய பொறுப்பு ஒன்றை தயார் செய்துவிட்டே விஜய் அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

நாதகவில்  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்தவர் காளியம்மாள். இவர் மீனவ சமூகத்தை சேர்ந்தவர் என்பது இன்னொரு ப்ளஸ். விஜய்க்கு ஏற்கனவே சிறுபான்மையினரின் ஆதரவு அமோகமாக உள்ளது. இந்நிலையில் காளியம்மாளும் கட்சியில் இணைந்தால் அந்த கேட்டகரியில் விஜய் படு ஸ்ட்ராங்க் ஆகிவிடுவார் என அவர் கணக்கு போட்டுள்ளாராம். இந்நிலையில் தவெகவில் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் வரும் பிப்ரவரி 26 நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மேடையிலேயே காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாகவும், அப்போது தவெக தலைவர் விஜய் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பை மேடையிலேயே வைத்து வழங்கப்போவதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தவெக கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், முதலாவதாக விக்கிரவாண்டியில் முதல் கட்சி மாநாட்டை நடத்தினார். அப்போது கொள்கை, கொள்கை தலைவர்கள், நிலைப்பாடு என்ன என்பதை அறிவித்து அதிரடி காட்டினார். இதனை அடுத்து தற்போது நடத்தப்பட உள்ள இரண்டாம் மாபெரும் விழாவில் அரசியல் தலைவர்கள், ஐஏஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் என தனது கட்சியில் பயணிக்கப்போகும் முக்கிய புள்ளிகளை அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புது முகத்தை உருவாக்கி வெற்றி காண்பதை விட பழக்கப்பட்ட முகத்தை வைத்து ஈஸியாக மக்கள் மனதில் இடம்பெற்று விடலாம் என்ற துருப்புச்சீட்டை கையில் எடுத்துள்ள விஜய், பிற கட்சிகளில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு வலைவீசி தன்பக்கம் இழுத்துவருகிறார். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவர். இவர்களும் இந்த நிகழ்வின் போது தான் கட்சியில் சேர இருந்ததாகவும், ஆனால் இந்த விழா ஏற்பாடுகளுக்கே அவர்களின் துணை தேவைப்பட்டதால் கொஞ்சம் முன்னதாகவே அவர்கள் தவெகவில் இணைந்து பயணிக்க தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் இந்த விழாவில் இன்னும் பல முக்கியப்புள்ளிகள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத், காளியம்மாள், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மருது அழகுராஜ், நடிகர் பார்த்திபன் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola