
CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடி
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சி.வி.சண்முகமும் சந்தித்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சந்திப்பின் போது கூட்டணி, பாஜக தலைவர் மாற்றும் மற்றும் வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பக பேசியதாக சொல்லப்படுகிறது.
அதிமுவும் பாஜகவும் கூட்டணி அமைத்து 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 ஆம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டி போட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் 20 தொகுதிகளாவது வென்றிருக்கலாம் என்று அதிமுக - பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் புலம்பியதாக செய்திகள் வெளியானது.
இதை போன்று கூட்டணி அமைக்காமல் பிரிந்து இருந்தால் 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கே சாதகமாக அமையும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுவருகிறார். அதோடு ஓபிஎஸ், தினகரனையும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அமித்ஷா இபிஎஸ்-யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது.
இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனும் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இந்த ஆலோசனை போது கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதேபோல், தமிழக பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என்ற முக்கிய கன்டிசனையும் இபிஎஸ் போட்டதாக கூறப்பட்டது. ஒருபுறம் நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக்க வேண்டும் என்று அதிமுக விருப்பம் தெரிவித்து வருவதாகவும் மறுபுறம் அண்ணாமலையோ கருப்பு முருகானந்தத்தை தமிழக பாஜக தலைவராக அறிவிக்க வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின
இந்த நிலையில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை சந்தித்து பேசியுள்ளார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சி.வி.சண்முகம் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு புறம் கூட்டணி, பாஜக தலைவர் மாற்றம் தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டாலும் வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. வக்பு வாரிய மசோதா மக்களவையில் 288 உறுப்பினர்கள் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோத தொடர்பான ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-யின் அறிவுரைப்படி அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வோம் என்று மத்திய அமைச்சர்களிடம் இருவரும் உறுதியளித்ததாகவும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதேபோல், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிரான பேட்ச்சை அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று அணிய மறுத்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.