”ஏன் இவ்ளோ பதட்டம்! செந்தில் பாலாஜி மேல சந்தேகம்” அண்ணாமலை ரியாக்ஷன்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாஅலாஜி இத்தனை பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புவதாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
கரூர் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி ஹேமமாலினி தலைமையிலான குழு கரூர் வந்து விசாரணை நடத்தியது. கரூரில் மட்டும் இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டது என ட்ராக்கை திருப்பினார் தவெக தலைவர் விஜய்.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விஜய் சரியான நேரத்தில் வந்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என பதிலடி கொடுத்தார். அதேபோல் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது பற்றி கேட்டதற்கு, “என் பெயரை சொன்ன பிறகு தான் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். விஜய் பேசிய 6வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது, என்னை பற்றி 16வது நிமிடத்தில் தான் பேசினார். விஜய்யின் கவனத்தை ஈர்க்க தொண்டர்கள் யாராவது செருப்பை வீசியிருக்கலாம் என தெரிவித்தார்.
இந்தநிலையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தது தொடர்பாக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனங்களை அடுக்கியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில், திரு. விஜய் அவர்கள் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன? கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள். நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், செந்தில் பாலாஜி இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது” என தெரிவித்துள்ளார்.