NEET Exam Student Suicide | திரும்பவும் EXAM எழுத தைரியம் இல்ல அம்மா NEET-ஆல் மாணவி தற்கொலை

Continues below advertisement

வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்வெழுதியிருந்த 18 வயது மாணவி, மீண்டும் ஒரு தேர்வெழுத தைரியமில்லை என அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், வினாத்தாள் கசிவு காரணமாக தேசிய தேர்வு முகமை மத்திய அரசின் ஒப்புதலுடன் தேர்வை ரத்து செய்தது.

மேலும், மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்தது. அதன்படி ஜூன் 21-ம் தேதி மறு தேர்வு நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு ரத்தால் 18 வயது மாணவி ஆகாங்ஷா சதுர்வேதி தற்கொலை செய்துகொண்டார்.

இவர் மத்திய பிரதேசத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள மாகனியா கிராமத்தைச் சேர்ந்தவர் . எளிய குடும்பப் பின்னணி கொண்ட இவர், மருத்துவராகி தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்ற கனவோடு நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

இவரின் தந்தை கிருஷ்ண குமார் சௌபே விவசாயி ஆவார். மக்களின் படிப்புக்காக கிசான் கிரெடிட் கார்டு கடன் மூலம் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

இத்தகைய சூழலில்தான், தேர்வு ரத்தானதால் மே 20-ம் தேதி பயிற்சி நிறுவனத்தில் மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி இறந்த சில நாள்களுக்குப் பிறகு அவரின் தற்கொலைக் கடிதத்தை அவரின் குடும்பத்தினர் கண்டெடுத்த நிலையில், தற்போது அந்தக் கடிதம் பொதுவெளியில் வெளியாகியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில் மாணவி தனது அப்பா அம்மாவைக் குறிப்பிட்டு, "உங்கள் மகள் நன்றாகப் படித்து மருத்துவராவாள் என்று மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தீர்கள். ஆனால் மீண்டும் ஒரு நீட் தேர்வை எழுத எனக்கு இப்போது தைரியம் இல்லை. என்னுடைய முதல் முயற்சியில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் இப்போது மீண்டும் நான் சிறப்பான மதிப்பெண் பெறுவேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்" என்று உருக்கமாக எழுதியிருக்கிறார்.

இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நீட் தேர்வு மட்டுமல்லாது, CBSC தேர்வுகள், அரசு போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு ஏற்படுவது நாளுக்கு நாள் தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்னையாக வெடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola