Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
நடிகையும், MISS புனே அழகி பட்டம் வென்றவருமான ட்விஷா சர்மாவின் மரணம் மத்திய பிரதேசத்தில் ஒருவாரமாக அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு போதைப்பழக்கம் இருந்ததாகவும், கர்ப்ப காலத்தில்கூட கஞ்சா பயன்படுத்தினார் என்று அவரின் மாமியார் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மே 12-ம் தேதி இரவு ட்விஷா சர்மா தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தனைக்கும், இவருக்கும் கணவர் சமர்த் சிங்குக்கும் கடந்த டிசமபர் மாதம் தான் திருமணம் ஆனது. வழக்கறிஞராக அறியப்படும் சமர்த் சிங், ஓய்வுபெற்ற அமர்வு நீதிபதி கிரிபாலா சிங்கின் மகன்.
ட்விஷாவின் மரணத்தில் போலீஸாரின் முதற்கட்ட கூற்றுப்படி, சம்பவம் நடந்த அன்று இரவு கணவரும், மாமியாரும், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவர்களிடம் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இறந்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்பிறகு இரவு 11 மணியளவில் மருத்துவமனையிலிருந்து போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்பின்னர், முதலில் தற்கொலை என்பதன் அடிப்படையில் போலீஸார் விசாரிக்கத் தொடங்கினர்.
இருப்பினும் ட்விஷாவின் பெற்றோர், தங்கள் மகள் கணவர் மற்றும் மாமியாரால் வரதட்சனைக் கொடுமைக்குள்ளானதாகவும், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்குள்ளானதாகவும் போலீஸில் புகாரளித்தனர்.
அதனடிப்படையில், சமர்த் சிங் மீதும் அவரின் தயார் கிரிபாலா சிங் மீதும், வரதட்சணைக் கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு, ஆறு பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டது.
அதேசமயம், மாமியார் 15-ம் தேதியே முன்ஜாமீன் வாங்கினார். ஆனால், கணவரின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததும் அவர் தலைமறைவானார். அதனால், அவர் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ட்விஷா இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு தனது தாயிடம், கணவர் வீட்டாரால் மன அழுத்தத்துக்குள்ளானதை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியதாகவும், குறிப்பாக "மூச்சுத்திணறுகிறது அம்மா" என்று வாட்சப்பில் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
அதைவிட முக்கியமாக, ட்விஷா இன்ஸ்டாகிராமில் தனது தோழியிடம், "நான் இங்கு சிக்கிக்கொண்டேன். நீயும் என்னைப்போல சிக்கிக் கொள்ளாதே. இப்போது அதிகம் பேச முடியாது. சரியான நேரம் வரும்போது அழைக்கிறேன்" என்று மெசேஜ் செய்தாகக் கூறப்படுகிறது. அதற்கடுத்த நாள்தான், ட்விஷா உயிரிழந்திருக்கிறார்.
போலீஸார் மேலும் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் இருவீட்டாரும் மாறி மாறி வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.
ஒருபக்கம் ட்விஷாவின் தந்தை நவ்நிதி ஷர்மா, "ட்விஷா தனது வேலையை இழந்தபோது, `வேலை இல்லனா உனக்கு யாரு போடுறது' என அவர்கள் முதலில் வார்த்தைகளால் துன்புறுத்தினார்கள்.
சமர்த் சிங்கின் நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே குற்றவாளியைப் போல் இருந்தது. அவர் தேனிலவின்போது ஒருமுறை கோபத்தில் ட்விஷாவை தள்ளிவிட்டார்.
அப்போது, ட்விஷா தனது சகோதரனிடம் தப்பா முடிவு எடுத்துட்டேனா என்று கேட்டார். அந்த சமயத்தில், கோபம் எப்போதாவது வருவது இயல்புதானே என பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சமாதனம் அவரை செய்தோம். ஆனால் இப்போதுதான் உணர்கிறோம் அதை புறக்கணித்திருக்க கூடாது என்று.
அவர்களின் குடும்பத்தில், முதல் மருமகளும் இதேபோன்ற துன்புறுத்தல் காரணமாக விவாகரத்து பெற்றார்" என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
அதேவேளையில், ட்விஷாவின் மாமியார் கிரிபாலா சிங், "ட்விஷாவின் பெற்றோர் அவளை இளம் வயதிலேயே கவர்ச்சி உலகிற்குள் தள்ளி சம்பாதித்தனர்.
ட்விஷாவுக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. கர்ப்ப காலத்தில்கூட கஞ்சா உட்கொண்டதாக அவரே கூறியிருக்கிறார்.
அவருக்கு மனநல பாதிப்பு இருந்தது. மனநல ஆலோசனைக்கும் சென்றாள், அதற்கான மருந்துகளையும் அவர் எடுத்து வந்தார்.
ஓரிரு நாள் நன்றாக இருப்பார் பின்னர் அவரது நிலையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படும். அவரின் கைகளில் லேசான நடுக்கம் போன்ற அறிகுறிகளை நாங்கள் கவனித்தோம். இது போதைப்பொருள் பழக்கத்தை நிறுத்துவதால் ஏற்படும் பொதுவான அறிகுறி.
அவரைப் பார்த்துக்கொள்ள, அவரின் பெற்றோர்களை அழைத்தோம். ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக அவர்கள் ட்விஷாவைப் பார்க்க வரவேயில்லை" என்று கூறியிருக்கிறார்.
இருவீட்டாரும் இவ்வாறு மாறி மாறி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















