
Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரை
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவில் தொழுகை நடத்த தடையை மீறி செல்ல முயன்றதாக பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவில் ஆடு கோழி பலியிடகூடாது அசைவ உணவு சாப்பிடக்கூடாது என பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்ற மலை மீது அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாக கடும் சர்ச்சை வெடித்தது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்த நிலையில், பாஜக சிறுபான்மை நல பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் நவாஸ் கனியின் புகைப்படத்தை காலணியால் அடித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்வதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் இப்ராஹீமை மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கைது செய்து இரவு விடுவித்தனர்.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் செல்வதாக வேலூர் இப்ராஹிம் அறிவித்த நிலையில், இன்று கப்பலூரிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் போது தனக்கன்குளம் பகுதியில் திருப்பரங்குன்றம் உதவி காவல் ஆணையாளர் குருசாமி தலைமையில் வேலூர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றதாக தகவல் வெளியானது
வேலூர் இப்ராஹிமுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் கப்பலூர் பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.