PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கையில் இருக்கும் மதுரை மத்திய தொகுதியை ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிடிஆரை எதிர்த்து களமிறங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமக 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும், தமாகாவிற்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவிற்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏசி சண்முகம் சந்தித்து பேசியிருந்தார். இந்தநிலையில் அவருக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மதுரை வடக்கு தொகுதியை குறிவைத்த நிலையில் மதுரை மத்திய தொகுதி கிடைத்துள்ளது. மேலும் இந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர்.
தற்போது மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வசம் இருக்கிறது. 2016 மற்றும் 2021 என 2 தேர்தல்களிலும் மதுரை மத்திய தொகுதியில் வெற்றியை தட்டிச் சென்றார் பிடிஆர். இந்தநிலையில் 2026 தேர்தலில் மதுரை மத்திய தொகுதி கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளார் பிடிஆர். இதுதொடர்பான அவரது பதிவில் என் தொகுதி வாக்காளர் பெருமக்கள் முதல் தேர்தலில் அளித்த ஆதரவை விட அதிகமான வாக்குகளால் இரண்டாம் முறை வெற்றி பெறச் செய்தது மட்டுமன்றி, என் பாசத்திற்குரிய தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தமது தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றும் அரிய வாய்ப்பை வழங்கினார். அதன் மூலம், என் வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மக்கள் நலனிலும் மாநில முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளை நிறைவேற்றும் நற்பேறு கிடைத்தது. மீண்டும் ஒருமுறை கழகத் தலைவரிடம், எனது பொது வாழ்க்கையைத் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வாய்ப்பு கோரி, மூன்றாவது முறையாக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவைச் சமர்ப்பித்தேன். கழகத் தலைவர் வாய்ப்பளித்தால் எனது தொகுதி மக்களிடம், பத்தாண்டுகளாக எனக்கு அளித்து வந்த மகத்தான ஆதரவை, இம்முறையும் தொடர்ந்து வழங்கிடக் கோருவேன்” என தெரிவித்தார்.
இந்த முறையும் பிடிஆருக்கு மதுரை மத்திய தொகுதியே ஒதுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சி களமிறங்குகிறது. புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் வழக்கறிஞர் கார்த்தி போட்டியிடுவார் எனவும் கூறப்படுகிறது.