MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?
தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள, சித்திக் ஐ.ஏ.எஸ்., யார்? முதல்வர் விஜய் இவர் மீது அலாதி நம்பிக்கை வைக்க காரணம் என்ன என்பது குறித்து விரிவாக காணலாம்.
மெட்ராஸ் ஐஐடியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் தொழில்நுட்ப இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள சித்திக், கடந்த 1995ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்ச்சில் தமிழ்நாடு கேடர் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார்.தமிழ்நாடு அரசில், 1997-1998 வரை விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் துணை ஆட்சியராகப் பணியாற்றினார். 1998ம் ஆண்டு நிதித்துறையில் அரசின் துணைச் செயலராகச் சேர்ந்தார். 1999 முதல் 2002ம் ஆண்டு வரை நிதித்துறையில் துணைச் செயலராக பணியாற்றியதோடு, மாநில அரசின் வரவு செலவுத் திட்ட அதிகாரியாகவும் செயல்பட்டார். 2002 முதல் 2004 வரை தர்மபுரி மாவட்டத்திலும், 2006 முதல் 2007 வரை சிவகங்கை மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார்.
2004 முதல் 2006 வரை இரண்டு ஆண்டுகள் அருங்காட்சியகங்களின் இயக்குநராகவும், 2014 முதல் 2017 வரை மூன்று ஆண்டுகள் ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராகவும் பதவி வகித்தார். ஜூன் 2022ம் ஆண்டு தற்போது வகித்து வரும் சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குநர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, 2017 முதல் 2019 வரை நிதித் துறையின் முதன்மைச் செயலர் (செலவினம்), 2019 முதல் 2021 வரை வணிக வரிகள் ஆணையர், மற்றும் டிசம்பர் 2021 முதல் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகிய பதவிகளை வகித்தார். இதனிடையே மத்திய அரசிலும் சித்திக் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன்படி, 2008-2009 காலகட்டத்தில் செலவினத் துறையின் இயக்குநராகப் பணியாற்றினார். மேலும், 2009 முதல் 2014 வரை ஐந்து ஆண்டுகள் உள்துறை மற்றும் நிதி ஆகிய இரண்டு முக்கிய அமைச்சகங்களில் பணியாற்றினார்.
நேர்மையான, கறாரான, கண்டிப்பான மற்றும் மாநில நிதிநிலைகள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்ட அதிகாரியாக, சக ஊழியர்களால் சித்திக் அடையாளம் காணப்படுகிறார். அதேநேரம், பேட்மிண்டன் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவராக உள்ளார். 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் மற்றும் சுவிஸ் ஓபன் போட்டிகளில் இந்திய பேட்மிண்டன் அணியின் மூத்த அணி மேலாளராகப் பணியாற்றியுள்ளார். 2016-ஆம் ஆண்டில் பிரீமியர் பேட்மிண்டன் லீக்கின் நிர்வாகக் குழுவிலும் இருந்துள்ளார்.
23 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்துடன், பொது நிதி, மக்கள் நலதிட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பது, உளட்கட்டமைப்பு மற்றும் பொது நிர்வாகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால், இவரது பெயரை முதலமைச்சர் அலுவலகம் டிக் செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே சுமார் 10 லட்சம் ரூபாய் கடன் பிரச்னையில் சிக்கியுள்ளது. இதுபோக, மகளிருக்கு மாதம் ரூ.2,500, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை, ஆண்டிற்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் என ஏராளமான வாக்குறுதிகளை, தேர்தலின் போது முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இவை அரசுக்கு மிகப்பெரிய செலவினத்தை ஏற்படுத்தக் கூடும். அதற்கேற்றவாறு வருவாயை பெருக்கவும், நிதிநிலையை கையாளவும் அனுபவம் வாய்ந்த சித்திக்கின் பங்களிப்பு மிகவும் உதவிகரமாக இருக்கும் என அரசு தரப்பு நம்புவதாக சொல்லப்படுகிறது.