1L Milk in 1 Bucket Water | 1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர்!மதிய உணவு திட்டத்தில் அவலம் வைரல் வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளியொன்றில் மதிய உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் கல்வித்துறை உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பின்னர் இந்த வீடியோ குறித்து வெளியான தகவலில், இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் திக்வாஹாவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த புதன்கிழமை நடந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய மஹோபா பகுதியின் தொடக்கக் கல்வி அதிகாரி ராகுல் மிஸ்ரா, அப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் விசாரணையில், மதிய உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாலில் அதிக அளவு தண்ணீர் கலக்கப்பட்டது உண்மைதான் என்று தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தில் இத்தகைய செயல்கள் நடப்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. ஏற்கெனவே, 2021-ல் மீரட்டில் அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் 2 லிட்டர் பாலில் 5 லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்டது. அதேபோல், 2019-ல் சோன்பத்ராவில் அரசுபள்ளியொன்றில் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலக்கப்பட்டது என மதிய உணவுத் திட்டத்தில் தொடர்ச்சியாகப் பல குளறுபடிகள் நடந்து வருகிறது.























