DMDK Join DMK Alliance | பழம் நழுவி பாலில் விழுந்தது கலைஞர் கேட்டும் வராத DMDK தட்டித்தூக்கிய ஸ்டாலின்
முதல்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. 2016-ல் கலைஞர் எதிர்பார்த்த கூட்டணி 10 வருடங்கள் கழித்து தற்போது சாத்தியமாகியிருக்கிறது.
வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பது உறுதியாகவிட்ட போதும், தேமுதிக மட்டும் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவும் இதோ அறிவிக்கிறோம், அதோ அறிவிக்கிறோம் என்று கூறிவந்தார்.
ஒரு கட்டத்தில் தேமுதிக இரட்டை இலக்கத்தில் சீட்களை எதிர்பார்ப்பதாகவும், திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேசிவருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. அதற்கேற்றாற்போலவே, இரு கூட்டணிகளுமே இன்னும் சில கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு வரவிருப்பதாகவும் கூறிவந்தன.
ஆனால், திமுக அமைச்சார் ராஜகண்ணப்பன் தேமுதிக பற்றி, ``எதாவது ஒரு கட்சிக்கு விசுவாசமா இருக்கணும். ரெண்டு பக்கமும் பேசக்கூடாது. அதெல்லாம் ஒரு கட்சி" என்று பேசியது, திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற சந்தேகத்தை எழுப்பியது.
அதோடு, மகாசிவராத்திரியன்று ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி வேலுமணியுடன் பிரேமலதா இருந்ததால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையப்போவதாக பேசப்பட்டது.
இவ்வாறிருக்க, ராஜ்ய சபா தேர்தல் அறிவிப்பு வெளியான அடுத்த நாளே பிரேமலதாவும், சுதீஷும் முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து திமுக - தேமுதிக கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.
2016 சட்டமன்றத் தேர்தலின்போது, "பழம் கனிந்து கொண்டிருக்கிறது, அது எப்போது பாலில் விழும் என்று தெரியவில்லை" என்று விஜயகாந்த்தின் வரவை கலைஞர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆனால், அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் நல கூட்டணியமைத்து படுதோல்வியடைந்தது தேமுதிக.
அதன்பின்னர் 2019-ல் தேசிய ஜனநாயக கூட்டணி, 2021 சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனுடன் கூட்டணி, 2024 நாடளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக வெறும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது.
இதில், 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யா சபா சீட் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பின் அது கொடுக்கப்படவில்லை. இதில் பிரேமலதாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் திமுகவுடன் தேமுதிக முதல்முறையாக இணைந்திருக்கிறது.
எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் ஒரு ராஜ்ய சபா சீட்டை வாங்கிவிட பிரேமலதா உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவையில் பூஜ்ஜியமாக இருக்கும் தேமுதிக, இந்தத் தேர்தல் மூலம் சட்டப்பேரவை அல்லது மாநிலங்களவையில் தங்களின் கணக்கைத் தொடங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
2016-ல் கலைஞர் எதிர்பார்த்த கூட்டணி தற்போது 10 வ்ருடங்களுக்குப் ஸ்டாலின் தலைமையில் சாத்தியமாக்கியிருப்பது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.