DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
சார் எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான் ரொம்ப கஷ்டப்படுறோம் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு பண்ணுங்க என திமுக எம்பியிடம் 14 வயது மாணவன் கோரிக்கை வைத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது..
தருமபுரி அடுத்தசோகத்தூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த தொழிலாளி பாஸ்கர். இவரது மனைவி முருகவள்ளி. இந்த தம்பதிக்கு 14 வயதில் அன்பரசு எனும் மகன் இருக்கிறான். இவர் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தினசரி தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு மினி பஸ் மூலம் சென்று வருகிறார். இந்நிலையில் சில ஆண்டிற்கு முன்பு உடல்நலக்குறைவால் பாஸ்கர் உயிரிழந்தார். கூலிவேலை செய்து முருகவள்ளி குடும்பத்தை கவனித்து வரும் நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து தர்மபுரி நகர பேருந்துநிலையத்தில் பஸ் ஏறுவதற்கு மாணவன் அன்பரசு காத்திருந்தார். அப்போது நகர பேருந்து நிலையத்தில் எஸ்ஐஆர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதில் கலந்து கொள்ள தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி வந்திருந்தார். எம்பி வந்திருந்ததை அறிந்த அன்பரசு நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்தார். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏற சென்ற எம்பியிடம் மாணவன் அன்பரசு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தந்தை இறந்துவிட்டார். அம்மா மட்டும் தான் உள்ளார். பெற்றோர்கள் இழந்த பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெற வழிவகை தெரியவில்லை அதை பெற்றுத்தரும்படி எம்பியிடம் கோரிக்கை வைத்தார்.
உடனே எம்பி கனிவோடு விசாரித்து உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாணவனிடம் உறுதி அளித்தார். அதன்பின், மாணவனுக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதையும் எம்பி சரி செய்து தருவதாக மாணவனிடம் கூறினார். நல்லபதிலை கேட்ட மாணவன் மகிழ்ச்சியுடன் பஸ் ஏறி வீட்டிற்கு சென்றார். மாணவன் தனியாக வந்து ஒரு எம்பியிடம் கோரிக்கை வைத்தது பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடையே வியப்பதையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.