Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முக்கிய அரசு அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறையில் நீண்ட அனுபவம், கடுமையான நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக திறமை காரணமாக அறியப்படும் அமல்ராஜ் யார்? அவரின் பயணம் என்ன? விரிவாக பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர் அமல்ராஜ். நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், பின்னர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரி காலத்திலேயே ஹாக்கி வீரராகவும், தேசிய மாணவர் படையான என்.சி.சி-யிலும் செயல்பட்டு வந்தார். பின்னர் மனிதவள மேலாண்மை துறையில் எம்பிஏ பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான அவர், திருப்பூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது காவல் பணியை தொடங்கினார்.
அதன்பிறகு மதுரை துணை காவல் ஆணையர், தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.
பின்னர் சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மாநகரங்களில் காவல் ஆணையக இருந்த போது நகரம் முழுவதும் அதிநவீன உயர்-தெளிவுத்திறன் கொண்ட (High-Definition) சிசிடிவி கேமராக்களைப் பெருமளவில் நிறுவினார். இந்தத் திட்டத்தின் மூலம் அந்தந்த நகரங்களில் குற்றச் சம்பவங்கள் சுமார் 40 சதவீதம் வரை குறைந்தன. ,
மத்திய மற்றும் மேற்கு மண்டல ஐஜியாகவும் செயல்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையராக இருந்தபோது, ரவுடியிசம் மற்றும் கட்டப் பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்திய நடவடிக்கைகளால் கவனம் பெற்றார். அதேபோல், பல நகரங்களில் உயர் தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்.
துப்பாக்கி சுடும் போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்ட அமல்ராஜ், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று மாநில சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
திருச்சி மற்றும் கோவையில் உலகத் தரம் வாய்ந்த துப்பாக்கி சுடும் தளங்களை உருவாக்கியதோடு, சென்னை எழும்பூர் மற்றும் கோவையில் மாநிலத்தின் முதல் போலீஸ் மியூசியத்தை அமைத்ததிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
காவல் பணி மட்டுமல்லாமல் எழுத்திலும் தனது தடத்தை பதித்துள்ளார். "வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்", "காவல்துறையினருக்கு வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள்", "வெல்ல நினைத்தால் வெல்லலாம்", "சிறகுகள் விரித்திடு", "போராடக் கற்றுக்கொள்" உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
சிறப்பான காவல் பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கம், முதலமைச்சரின் சிறப்பு பதக்கம் மற்றும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
காவலர், நிர்வாகி, எழுத்தாளர், விளையாட்டு வீரர் என பல முகங்கள் கொண்ட அமல்ராஜ், தற்போது சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கு பொறுப்பை ஏற்றுள்ளார். புதிய பொறுப்பில் அவர் எத்தகைய மாற்றங்களை கொண்டு வருவார் என்பது தற்போது கவனிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.