
John Jebaraj Arrest : தப்பி ஓடிய ஜான் ஜெபராஜ் தட்டித்தூக்கிய போலீஸ் மூணாறில் அதிரடி கைது : TN Police
பாலியல் தொல்லை புகாரில் மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் மூணாறில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிறிஸ்தவ மத போதனைகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் இளைஞர்களை கவரும் வகையில் புது யுத்திகளையும், நகைச்சுவையாகவும் பேசி மதபோதனைகளை பரப்பி வந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், யூ டியூப்களில் இவரது மத போதனை வீடியோக்கள் மிகவும் பிரபலம். மேலும், கிறிஸ்துவ மதத்தை தவறான வழியில் போதித்து ஜான் ஜெபராஜ் பணம் சம்பாதிப்பதாகவும் பலரும் இவர் மீதும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவர் மத போதனை செய்யும் விதத்திற்கு கிறிஸ்தவ மதத்தின் மூத்த போதகர்கள், பாதிரியார்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். திரைப்பட பாடல்களின் பாணியிலும், நகைச்சுவையாகவும் இவர் மத போதனை செய்வது பலரையும் கவரும் வண்ணம் இருந்தாலும் இவர் வேதம் கற்பிக்கும் முறை தவறு என்றும் பலரும் இவர் மீது விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
பல விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார் என பாலியல் வழக்கில் சிக்கியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மத போதகர் ஜான் ஜெபராஜை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அவர் தன் மீது வழக்குப்பதிவானதைத் தொடர்ந்து தலைமறைவாகினார். இந்த நிலையில், மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
விரைவில் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ஜான் ஜெபராஜை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயன்றனர். நள்ளிரவு மூணாறு பகுதியில் வைத்து மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் வேறு ஏதேனும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.