குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2500? மகளிருக்கு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் CM விஜய் மெகா பிளான்

Continues below advertisement

தவெக அரசின் முதல பட்ஜெட் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய், பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், 6 விலையில்லா சிலிண்டர்கள், 200 யூனிட் இலவச மின்சாரம் இலவசம், மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

பின்னர் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவியேற்ற முதல்நாளே, 200 யூனிட் இலவச மின்சாரம் இலவசம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதனைத்தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் போடும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இத்திட்டத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

இவ்வாறு ஒவ்வொரு திட்டங்களாக கொண்டுவாரப்பட்டாலும் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் திட்டம் எப்போது நடைமுறைக்கு என்பது மகளிரின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கெனவே, கடந்த திமுக ஆட்சியில் 2023-ல் அண்ணா பிறந்த நாளில் கொண்டுவரப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் திட்டம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம், சுமார் 1.31 கோடி மகளிர் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய அறிவிப்புகள் மற்றும் நிதி நிலைமை தொடர்பாக தினந்தோறும் ஒவ்வொரு துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசித்து வரும் விஜய், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

எனவே, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்  இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் கூறப்படுகிறது. ஒருவேளை இத்திட்டம் அறிவிக்கப்படும் பட்சத்தில், இத்திட்டடத்துக்காக ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola